வடசென்னை பகுதிகளில் சமூக இடைவெளியை மறந்த பொதுமக்கள் - சாலைகளில் கூட்டமாகவும், முக கவசம் இல்லாமலும் சுற்றுகிறார்கள்


வடசென்னை பகுதிகளில் சமூக இடைவெளியை மறந்த பொதுமக்கள் - சாலைகளில் கூட்டமாகவும், முக கவசம் இல்லாமலும் சுற்றுகிறார்கள்
x
தினத்தந்தி 22 Jun 2020 11:00 PM GMT (Updated: 22 Jun 2020 10:54 PM GMT)

கொரோனா அச்சம் தணிந்தது போல வடசென்னை பகுதிகளில் சமூக இடைவெளியை மறந்து சாலைகளில் பொதுமக்கள் அலட்சியமாகவும், முக கவசம் இல்லாமலும் சுற்றி திரிகிறார்கள்.

சென்னை, 

கொரோனா பீதி காரணமாக உலக நாடுகள் அனைத்துமே அச்சத்தில் மூழ்கி கிடக்கின்றன. இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் வீரியம் பெற்று வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை இன்று கொரோனாவின் தலைநகர் போல உருவெடுத்து வருகிறது. அந்தளவு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை உள்பட 4 மாவட்டங்களில் தற்போது முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்தியமாநில அரசுகள் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அத்தியாவசிய தேவையில்லாமல் மக்கள் வீட்டை வெளியே வரவேண்டாம் என்று எவ்வளவோ சொன்னாலும், மக்கள் அதை காதில் வாங்கி கொள்ளாமல் சாலையில் நடமாடுவதை பார்க்க முடிகிறது. அரசின் நடவடிக்கைகளில் மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறார்கள் என்பதே உண்மையாக இருக்கிறது. காணுகிற காட்சிகளும் அதையே மெய்ப்பிக்கின்றன.

குறிப்பாக வடசென்னை பகுதிகளில் கொரோனா அடங்கினாலும் அடங்குமே தவிர மக்கள் அடங்க மறுக்கிறார்கள். அரசின் அறிவுரைகளை காதில் போட்டுக்கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும்.

கூட்டமாக சுற்றும் வேதனை

சென்னையிலேயே ராயபுரம் மண்டலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கிறது. ஆனால் அந்த பயமே இல்லாமல் ராயபுரத்தில் கண்பட்ட இடமெல்லாம் மக்கள் ஏதோ ஒன்றுமே நடக்காதது போலவே அலைந்து திரிகிறார்கள்.

ராயபுரம் போலவே தண்டையார்ப்பேட்டை, திரு.வி.க.நகர், வண்ணாரப்பேட்டை, மின்ட், பெரம்பூர், வியாசர்பாடி, எண்ணூர், திருவொற்றியூர் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் மக்கள் இன்னமும் நோயின் வீரியத்தை உணரவில்லை. சமூக இடைவெளி என்றால் என்ன? என்று கேட்கும் அளவுக்கு சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றுகிறார்கள். இதில் பலர் முக கவசம் அணியவில்லை என்பது தான் வேதனையின் உச்சம்.

காய்கறி மார்க்கெட்களிலும் கூட்ட நெரிசல் இருக்கிறது. கட்டுப்படுத்த போலீசார் எவ்வளவோ கத்தி பார்த்தும் மக்கள் கண்டுகொள்வதாக தெரியவில்லை. சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளும் மருந்துச்சீட்டு ஒன்றை ரெடியாக பாக்கெட்களில் வைத்திருக்கிறார்கள். சாலையில் செல்லும்போது போலீசார் இடைமறித்தால், இந்த மருந்துச்சீட்டை காட்டி தப்பிவிடுகிறார்கள். இதனால் போலீசாரும் ஒன்றும் செய்யமுடியாமல் தவிக்கிறார்கள். தீவிர முழு ஊரடங்கை இன்னும் சில நாட்கள் அமல்படுத்தியிருந்தால் நன்றாக இருக் கும் என்று சில போலீசாரே கருத்து தெரிவிக்கிறார்கள்.

விழலுக்கு இறைத்த நீராக...

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மக்களிடம் இருந்து இன்னும் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவே இல்லை. மக்களின் ஒத்துழைப்பும், சமூக இடைவெளியும், ஊரடங்கும் தான் இப்போதைக்கு நோயை விரட்டக்கூடிய சக்தி வாய்ந்த மருந்துகள். மக்களின் ஒத்துழைப்பு என்ற மருந்து முழுமையாக கிடைக்காதவரை, கொரோனாவை விரட்ட முடியாது.

ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அவை விழலுக்கு இறைத்த நீராக வீணாகிக் கொண்டிருப்பதைத்தான் பார்க்க முடிகிறது.

மக்கள் முழுமூச்சாக ஊரடங்குக்கு ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே நோய் தடுப்பு நடவடிக்கை சாத்தியம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

Next Story