59 போலீசாருக்கு கொரோனா; பெங்களூருவில் 6 போலீஸ் நிலையங்கள் மூடல் - மந்திரி பசவராஜ் பொம்மை தகவல்


59 போலீசாருக்கு கொரோனா; பெங்களூருவில் 6 போலீஸ் நிலையங்கள் மூடல் - மந்திரி பசவராஜ் பொம்மை தகவல்
x
தினத்தந்தி 23 Jun 2020 12:03 AM GMT (Updated: 23 Jun 2020 12:03 AM GMT)

பெங்களூருவில் 59 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் 6 போலீஸ் நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதாகவும் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு, 

பெங்களூருவில் 59 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் 6 போலீஸ் நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதாகவும் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

கர்நாடக மாநில போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. காய்ச்சல், மூச்சுத்திணறல் பிரச்சினை உள்ளவர்களுக்கு கொரோனா பரவி வருகிறது. கொரோனாவை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளை கண்காணிப்பு மையங்களில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

போலீசார் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள். இதனால் பெங்களூருவில் 59 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 6 போலீஸ் நிலையங்களை மூடிவிட்டோம். கொரோனாவை தடுக்க முன்களத்தில் நின்று போராடுபவர்களுக்கு பரிசோதனையில் முன்னுரிமை அளிக்கப்படும்.

கொரோனா சிகிச்சை

அதே போல், மருத்துவ ஊழியர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு கொரோனா சிகிச்சையில் முன்னுரிமை அளிக்கப்படும். போலீசாருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தையும் கொடுத்துள்ளோம். இனி வரும் நாட்களிலும் சில உபகரணங்களை வழங்குவோம். 55 வயதுக்கு மேற்பட்ட போலீஸ்காரர்களுக்கு பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளித்துள்ளோம். போலீசாருக்கு பணியை 3 ஷிப்டாக பிரித்துள்ளோம்.

இவ்வாறு மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story