போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வாட்ஸ்-அப்பில் ஆபாச படம் அனுப்பிய ஆசிரியர் கைது


போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வாட்ஸ்-அப்பில் ஆபாச படம் அனுப்பிய ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 23 Jun 2020 4:03 AM GMT (Updated: 23 Jun 2020 4:03 AM GMT)

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வாட்ஸ்-அப்பில் ஆபாச படம் அனுப்பிய கோவை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

கோவை,

கோவை சேரன்மாநகர் அருகே உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் பிரேம் கரண் (வயது 29). கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 20-ந் தேதி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறை வாட்ஸ்- அப் எண்ணுக்கு தன்னுடைய ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை 3 முறை அனுப்பியதாக தெரிகிறது.

இதுகுறித்து விசாரணை நடத்த போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து ஆபாசபடம் வந்த செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த படங்கள் கோவையில் இருந்து அனுப்பப்பட்டு இருப்பது தெரியவந்தது.

கொரோனா பரிசோதனை

இதனால் விசாரணை நடத்துவதற்காக ராமநாதபுரம் மாவட்ட போலீசார் கோவைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் பிரேம் கரணின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேச முயன்றனர். ஆனால் அவர் எடுத்து பேசவில்லை. இதையடுத்து போலீசார் அவரை எப்படியாவது ஒரு இடத்துக்கு வரவழைத்து கைது செய்ய முடிவு செய்தனர்.

தொடர்ந்து அவருடைய செல்போனுக்கு மீண்டும் தொடர்பு கொண்டனர். அப்போது அவர் போனை எடுத்து பேசியபோது, தாங்கள் சுகாதாரத்துறை அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதால், உங்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள இருப்பதால் சிவானந்தபுரத்துக்கு குறிப்பிட்ட முகவரிக்கு வருமாறு போலீசார் கூறினார்கள்.

சுற்றி வளைத்து கைது

அப்போது அவர் குறிப்பிட்ட முகவரிக்கு வந்தார். உடனே போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்து, வாகனத்தில் ஏற்றி ராமநாதபுரம் மாவட்டத்துக்கு அழைத்துச்சென்றனர். இதற்கிடையே, வெளியே சென்ற தனது மகன் வீடு திரும்பாததால், தனது மகனை காணவில்லை என்று பிரேம் கரணின் தந்தை சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோதுதான், ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறை வாட்ஸ்-அப்புக்கு பிரேம் கரண் ஆபாச படம் அனுப்பியதும், அந்த வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட போலீசார் அவரை கைது செய்து அழைத்துச்சென்றதும் தெரியவந்தது.

போலீசார் விசாரணை

அவர் எதற்காக ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறை வாட்ஸ்-அப்புக்கு ஆபாச படம் அனுப்பினார் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவையில் தனியார் பள்ளி ஆசிரியர், போலீஸ் கட்டுப்பாட்டு அறை வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story