ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட்டில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைக்கு ‘சீல்’ அதிகாரிகள் நடவடிக்கை


ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட்டில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைக்கு ‘சீல்’ அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 26 Jun 2020 1:16 AM GMT (Updated: 26 Jun 2020 1:16 AM GMT)

ராயக்கோட்டையில் தக்காளி மார்க்கெட்டில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை கூட்டு ரோட்டில் தக்காளி மார்க்கெட் உள்ளது. இங்கு பூ, தக்காளி மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் இயங்கி வருகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே பெரிய மார்க்கெட்டாக இந்த மார்க்கெட் உள்ளது. இங்கு கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமல்லாது, வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும், பொதுமக்களும் வந்து பொருட்கள் வாங்கிச்செல்வது வழக்கம்.

கடைக்கு ‘சீல்’

இந்த நிலையில் தக்காளி மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் எச்சரித்து சென்றனர். நேற்று தேன்கனிக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன், ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில் குமார், ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் ராயக்கோட்டை பகுதியில் ஆய்வு செய்தனர்.

அப்போது, ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்ட தக்காளி மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் மீண்டும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொதுமக்கள் திரண்டிருந்தது தெரிய வந்தது. மேலும் பலர் முக கவசங்கள் அணியாமல் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து அந்த கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

Next Story