போலீசார் தாக்கியதில் வியாபாரிகள் மரணம்: திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று கடையடைப்பு


போலீசார் தாக்கியதில் வியாபாரிகள் மரணம்: திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று கடையடைப்பு
x
தினத்தந்தி 26 Jun 2020 2:11 AM GMT (Updated: 26 Jun 2020 2:11 AM GMT)

போலீசார் தாக்கியதில் சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் அடைந்ததை கண்டித்து திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

திண்டுக்கல்,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு காலத்தில் அதிகநேரம் கடையை திறந்து வைத்ததாக கூறி, ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் தாக்கினர். இதில் அவர்கள் பரிதாபமாக இறந்தனர். இது, வணிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து மாவட்ட தொழில் வர்த்தகர் சங்க தலைவர் கிருபாகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், சாத்தான்குளம் வியாபாரிகளின் இரட்டை கொலையில் போலீசாரின் தீவிரவாதத்தை எதிர்த்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வேண்டுகோளுக்கு இணங்க, மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கம், திண்டுக்கல் வர்த்தகர் சங்கம், அனைத்து இணைப்பு சங்கங்கள் ஆகியவை இணைந்து இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

அதன்படி இன்று ஒருநாள் மட்டும் மாவட்டத்தில் அனைத்து வணிகர்களும் தங்களுடைய கடைகள், வணிக நிறுவனங்களை அடைத்து வணிகர்களின் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். இதற்கு வணிகர்களும், பொதுமக்களும் ஆதரவு தரவேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

மரக்கடைகள் அடைப்பு

இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மரக்கடைகளும் இன்று மூடப்பட உள்ளன. இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட மர அறுவைமில் மற்றும் மர வியாபாரிகள் சங்க தலைவர் செந்தில்குமார், செயலாளர் ராஜமுருகேஷ் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், சாத்தான்குளம் வணிகர்களின் இரட்டைக்கொலையை கண்டித்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மர அறுவை மில்கள், மரக்கடைகள், நிறுவனங்களை இன்று அடைத்து எதிர்ப்பை தெரிவிக்க உள்ளோம். இதற்கு அனைத்து வியாபாரிகள், பொதுமக்கள், தொழிலாளர்கள் ஆதரவு தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Next Story