நெல்லை, தூத்துக்குடி, தென்காசி எல்லைகள் மூடப்பட்டன மாவட்டத்துக்குள் மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் தவிப்பு


நெல்லை, தூத்துக்குடி, தென்காசி எல்லைகள் மூடப்பட்டன மாவட்டத்துக்குள் மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் தவிப்பு
x
தினத்தந்தி 26 Jun 2020 3:46 AM GMT (Updated: 26 Jun 2020 3:46 AM GMT)

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட எல்லைகள் மூடப்பட்டன. மாவட்டத்துக்குள் மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் ஊருக்கு செல்ல முடியாமல் பரிதவித்தனர்.

நெல்லை,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. கடந்த 1-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் மாவட்டங்கள் மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு, பஸ்களை இயக்க அரசு அனுமதி அளித்தது.

அதன்படி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்த்து நெல்லை மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இந்த மாவட்டங்களுக்குள் பஸ்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று குறையாமல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து நேற்று முதல் வருகிற 30-ந் தேதி வரை மாவட்டம் விட்டு மாவட்டம் பஸ்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கு அரசு தடை விதித்துள்ளது.

பயணிகள் தவிப்பு

இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட எல்லைகள் அனைத்தும் தடுப்பு வேலிகள் மூடப்பட்டன. மாவட்டத்தில் கங்கைகொண்டான், வன்னிக்கோனேந்தல், சீதபற்பநல்லூர், மூலைக்கரைப்பட்டி, பெரியதாழை, பாறைகுளம், காவல்கிணறு, சீவலப்பேரி உள்பட 14 வாகன சோதனை சாவடிகள் உள்ளன. அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வேறு மாவட்டம் செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. நெல்லையில் இருந்து தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதை அறியாமல் ஏராளமான பயணிகள் நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு வந்தனர். இதனால் அங்கு கூட்டம் அலைமோதியது. சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பயணிகள் தவித்தனர். அரசு ஊழியர்களுக்கு நாகர்கோவில், தூத்துக்குடி, சங்கரன்கோவில் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. காலையும், மாலையும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அரசு ஊழியர்கள் தங்கள் அடையாள அட்டையை காட்டி டிக்கெட் எடுத்து பயணம் செய்தனர்.

மாவட்டம் விட்டு, மாவட்டம் செல்ல கார், வேன்கள், மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி இல்லை. இ-பாஸ் எடுத்து பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள வாகன சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்திலும் எல்லைகள் மூடப்பட்டன. மாவட்டத்துக்குள் நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து வரும் 5 முக்கிய சாலைகள் உள்பட 15 சாலைகளில் மீண்டும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த சோதனைச்சாவடிகளில் இரவு, பகலாக போலீசார் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து இ-பாஸ் பெற்று வருபவர்கள் மட்டும் உரிய பரிசோதனைக்கு பிறகு மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதேபோன்று வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. மாவட்டத்துக்குள் மட்டும் 120 பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனாலும் இந்த பஸ்களில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. இதனால் தொடர்ந்து பஸ்களின் எண்ணிக்கை மேலும் குறைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தென்காசி

தென்காசி மாவட்டத்திலும் எல்கைகள் அடைக்கப்பட்டன. மாவட்டத்தில் சிவகிரி, வேலாயுதபுரம், நடுவப்பட்டி, கரட்டுமலை, பனவடலிசத்திரம், ஆலங்குளம், ரெட்டியார்பட்டி, ஆழ்வார் துலுக்கன் குளம், ஆம்பூர் ஆகிய பகுதிகளில் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே கேரள மாநிலத்தில் இருந்து வருபவர்களை கண்காணிக்க புளியரை மற்றும் மேக்கரையில் சோதனைச்சாவடிகள் இயங்கி வருகின்றன. அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story