சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்- மவுன ஊர்வலம்


சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்- மவுன ஊர்வலம்
x
தினத்தந்தி 26 Jun 2020 10:45 PM GMT (Updated: 26 Jun 2020 7:07 PM GMT)

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மவுன ஊர்வலமாக சென்றும் அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி, 

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மவுன ஊர்வலமாக சென்றும் அஞ்சலி செலுத்தினர்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை-மகனான வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. 

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, எட்டயபுரம், குளத்தூர், சாத்தான்குளம், கூட்டாம்புளி, காயல்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடைகள் மூடப்பட்டு இருந்தன. மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் கடைகள் மூடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆத்தூர், ஆறுமுகநேரி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன.


இதேபோன்று சாயர்புரம் வர்த்தக வியாபாரிகள் சங்கம், நடுவக்குறிச்சி வியாபாரிகள் சங்கம் சார்பில், சாயர்புரம் மெயின் பஜாரில் மவுன ஊர்வலம் நடந்தது. முக்கிய வீதிகளின் வழியாக வியாபாரிகள் மவுன ஊர்வலமாக சென்று, மீண்டும் மெயின் பஜாரை வந்தடைந்தனர்.

வர்த்தக வியாபாரிகள் சங்க தலைவர் நாகராஜன், செயலாளர் பண்டாரம், பொருளாளர் ராஜா டேவிட், நடுவக்குறிச்சி வியாபாரிகள் சங்க தலைவர் ராஜா, பொருளாளர் பெரியசாமி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். இதே போன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.


Next Story