மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா


மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 27 Jun 2020 12:03 AM GMT (Updated: 27 Jun 2020 12:03 AM GMT)

மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 5 ஆயிரத்து 24 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1½ லட்சத்தை தாண்டி உள்ளது.

மும்பை, 

நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதும் மாநிலத்தில் நோய் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது.

குறிப்பாக ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்ட பிறகு நோய் பாதித்தவர்கள், பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக 5 ஆயிரத்து 24 பேரை கொடிய கொரோனா பாதித்து இருப்பது கண்டறியப்பட்டது. மாநிலத்தில் ஒரே நாளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். நேற்று முன்தினம் 4 ஆயிரத்து 841 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இதனால் மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதன்படி 1 லட்சத்து 52 ஆயிரத்து 765 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. இதில் 79 ஆயிரத்து 815 பேர் குணமாகிவிட்டனர். தற்போது 65 ஆயிரத்து 829 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் நோய் பாதிப்பில் இருந்து குணமானவர்கள் சதவீதம் 52.25 ஆக உள்ளது.


இதேபோல மாநிலத்தில் மேலும் 175 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை மராட்டியத்தில் 7 ஆயிரத்து 106 பேர் உயிரிழந்து உள்ளனர். மாநிலத்தில் நோய் பாதிப்புக்கு உயிரிழப்பவர்கள் சதவீதம் 4.65 ஆக உள்ளது.

இதுவரை மாநிலத்தில் 8 லட்சத்து 71 ஆயிரத்து 875 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 17.52 சதவீதம் பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 5 லட்சத்து 58 ஆயிரத்து 488 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 36 ஆயிரத்து 903 பேர் தனிமை மையங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.


மும்பையில் நேற்று புதிதாக 1,297 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் நகரில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 175 ஆக அதிகரித்து உள்ளது. இதேபோல நகரில் மேலும் 117 பேர் உயிர்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை மும்பையில் 4 ஆயிரத்து 179 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனர்.

இதேபோல 39 ஆயிரத்து 744 பேர் குணமடைந்துவிட்டனர். தற்போது 28 ஆயிரத்து 244 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதேபோல புனே மாவட்டத்தில் புதிதாக 1,016 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அங்கு நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 31 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 675 பேர் பலியாகி உள்ளனர். புனே மாவட்டத்தில் தற்போது 8 ஆயிரத்து 331 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மராட்டியத்தில் பிற மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்கள் மற்றும் அடைப்புக்குறிக்குள் பலியானவர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:-
தானே 30,871 (816), பால்கர் - 4,536 (99), ராய்காட் - 3,248 (94), சோலாப்பூர் - 2,500 (236), ஜல்காவ் - 2,806 (204), நாசிக் - 3,433 (205), அவுரங்காபாத் - 4,354 (226), அகோலா - 1,370 (73), நாக்பூர் - 1,424 (14).

...................

Next Story