கொரோனா தொற்று அதிக அளவில் பரவுவதால் புதுவையில் மேலும் கட்டுப்பாடுகள்


கொரோனா தொற்று அதிக அளவில் பரவுவதால் புதுவையில் மேலும் கட்டுப்பாடுகள்
x
தினத்தந்தி 27 Jun 2020 2:33 AM GMT (Updated: 27 Jun 2020 2:33 AM GMT)

புதுவையில் அதிக அளவில் கொரோனா தொற்று பரவுவதையொட்டி மேலும் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாக பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் முதல் - அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி,

புதுவையில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்தது.

தொற்று பரவல் அதிகரிப்பு

கடந்த (மே) மாத இறுதியில் 5-ம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதன்படி வழிபாட்டுத்தலங்கள், கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகம் போன்றவை திறக்க அனுமதிக்கப்பட்டன. இந்தநிலையில் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அரசு வட்டாரம் அதிர்ச்சி அடைந்தது.

இந்தநிலையில் சென்னையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்து பலர் புதுச்சேரிக்கு இடம் பெயர்ந்ததுதான் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்ததற்கு காரணம் என்று சுகாதார துறை சார்பில் முதல்- அமைச்சர் நாராயணசாமியிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 21-ந்தேதி பேரிடர் மேலாண்மை கூட்டத்தை கூட்டி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. அதாவது கடைகள், பெட்ரோல் பங்குகள், மதுக்கடைகள், பூங்காக்கள் மதியம் 2 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி, கடற்கரை மூடப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை நாராயணசாமி அறிவித்தார்.

இந்த கட்டுப்பாடுகள் கடந்த 23-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தநிலையில் தொடர்ந்து கொரோனாவுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருந்து வருகிறது. இதுவரை மொத்தம் 534 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

பேரிடர் ஆலோசனைக் கூட்டம்

இந்தநிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் புதுச்சேரி மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்பில் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ் அமைக்கப்பட்ட மாநில செயற்குழுவின் தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் சட்டசபை வளாகத்தில் 4-வது மாடியில் அமைந்துள்ள கருத்தரங்குக் கூடத்தில் நேற்று மாலை நடந்தது.

கூட்டத்திற்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைச் செயலர் அஸ்வனி குமார், வளர்ச்சி ஆணையர் அன்பரசு, அரசு செயலாளர்கள் சுர்பிர் சிங், அசோக் குமார், தேவேஷ் சிங், ரவிபிரகாஷ், மாநில செயற்குழுவின் இயக்குனர் பங்கஜ் குமார், மாவட்ட கலெக்டர் அருண், துணை மாவட்ட ஆட்சியர்கள் அஸ்வின் சந்துரு, சுதாகர், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், அரசு செயலர் வல்லவன் உள்பட சுகாதாரத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கட்டுப்பாடுகள் அதிகரிப்பு?

கூட்டத்தில் கொரோனா பாதிப்புகள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிப்பட்டது. மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால் மேலும் சில கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தலாமா? என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

தற்போது மாலை நேரத்தில் முக்கிய வீதிகளில் நடைபயிற்சியில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கிறது. இதனால் கொரோனா தொற்று பரவும் அதிக வாய்ப்பு இருப்பதால் நடைபயிற்சிக்கு தடை விதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மேலும் சில கட்டுப்பாடுகள் தொடர்பாக அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story