கோபி, பெருந்துறை பகுதிகளில் ஜவுளிக்கடை உரிமையாளர் உள்பட 4 பேருக்கு கொரோனா


கோபி, பெருந்துறை பகுதிகளில் ஜவுளிக்கடை உரிமையாளர் உள்பட 4 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 27 Jun 2020 3:13 AM GMT (Updated: 27 Jun 2020 3:13 AM GMT)

கோபி, பெருந்துறையில் ஜவுளிக்கடை உரிமையாளர் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பெருந்துறை அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி மூடப்பட்டது.

பெருந்துறை,

பெருந்துறை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 23 வயது வாலிபர் அந்த பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு இருந்து உள்ளது. இதனால் அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று உள்ளார். எனினும் காய்ச்சல் குணமாகவில்லை. இதைத்தொடர்ந்து அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அந்த வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து அந்த வாலிபரின் பெற்றோர் மற்றும் தங்கைக்கும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி அந்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த ஆஸ்பத்திரியின் டாக்டர், அவருடைய மனைவி, நர்சு மற்றும் அருகில் உள்ள மருந்துக்கடை ஊழியர் ஆகியோரின் ரத்த மாதிரிகளும் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

தனியார் ஆஸ்பத்திரி மூடப்பட்டது

இந்த நிலையில் வாலிபருக்கு சிகிச்சை அளித்த ஆஸ்பத்திரி, மருந்து, மாத்திரைகள் கொடுத்த மருந்துக்கடை மற்றும் அந்த பகுதியில் 15 கடைகளை மூடி நடவடிக்கை எடுக்கும்படி பெருந்துறை தாசில்தார் முத்துகிருஷ்ணனுக்கு, மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து தாசில்தார் முத்துகிருஷ்ணன் சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு சென்று ஆஸ்பத்திரி மற்றும் மருந்துக்கடை உள்பட 15 கடைகளை மூட உத்தரவிட்டார். இதையடுத்து ஆஸ்பத்திரி மற்றும் கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் அந்த பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிருமி நாசினி தெளிப்பு

தற்போது பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 20-க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு அமைந்து உள்ள வளாகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

பெருந்துறை தீயணைப்பு நிலைய அதிகாரி வேலுச்சாமி மேற்பார்வையில் தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வண்டி மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கோபி

இதேபோல் கோபி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 45 வயது ஆண், 36 வயது வயதுடைய அவருடைய மனைவி மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த 22 வயது வாலிபர் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனால் கோபி அருகே உள்ள அந்த கிராமத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

Next Story