சாத்தான்குளம் வியாபாரி-மகன் உயிரிழந்த விவகாரம்: திருப்பூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் கடைகள் அடைப்பு


சாத்தான்குளம் வியாபாரி-மகன் உயிரிழந்த விவகாரம்: திருப்பூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 27 Jun 2020 3:29 AM GMT (Updated: 27 Jun 2020 3:29 AM GMT)

சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை-மகன் இறந்ததற்கு கண்டனம் தெரிவித்தும், இறப்புக்கு நீதி கேட்டும், திருப்பூர் மாவட்டம் முழுவதும் 15 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டன. மருந்துக்கடைகளும் 3 மணிநேரம் மூடப்பட்டன.

திருப்பூர்,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடுமுழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தந்தை-மகன் இறந்த சம்பவத்திற்கு நீதிகேட்டும் சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் 26-ந் தேதி (நேற்று) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்து இருந்தார். அதன்படி நேற்று தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள் கடைகளை அடைத்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் மளிகை, காய்கறி கடைகள், பர்னிச்சர், பேக்கரிகள் அடைக்கப்பட்டன.

திருப்பூர் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் பகுதிகள், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம், தளி, தாராபுரம், அவினாசி, பல்லடம், குன்னத்துர் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

15 ஆயிரம் கடைகள்

இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருப்பூர் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, செயலாளர் லாலா கணேஷ் ஆகியோர் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டம் முழுவதும் மளிகை கடைகள், காய்கறி கடைகள், ஓட்டல்கள், பர்னிச்சர் கடைகள், பேக்கரிகள், மருந்துக்கடைகள் உள்ளிட்ட கடைகள் ஒருநாள் அடைக்கப்பட்டன.

மாவட்டம் முழுவதும் 15 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டன. சாத்தான்குளத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாலை 5 மணிக்கு அவரவர் வீடுகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. வருகிற 30-ந் தேதி திருப்பூர் மாவட்டம் முழுவதும் அந்தந்த போலீஸ் நிலையங்களில் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக புகார் மனு கொடுக்க உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இந்த கடையடைப்புக்கு தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் ஆதரவு தெரிவித்தது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட மருந்துக்கடைகள் காலை 7 மணி முதல் 10 மணி வரை அடைக்கப்பட்டு இருந்தன.

உடுமலை

உடுமலையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் நடமாட்டமும் குறைவாக இருந்தது. மடத்துக்குளம் பகுதியில் உள்ள கணியூர், மடத்துக்குளம், காரத்தொழுவு, துங்காவி, தாந்தோணி, மைவாடி, கிருஷ்ணாபுரம், வேடபட்டி ஆகிய பகுதிகளில் ஒரு சில கடைகளை தவிர ஏராளமான கடைகள் காலை முதல் மாலை வரை அடைக்கப்பட்டிருந்தன.பின்னர் மடத்துக்குளம் மற்றும் கணியூர் பகுதியில் உள்ள வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் இறந்து போன 2 வணிகர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வியாபாரிகள் தங்களது இல்லங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி குடும்பத்துடன் அஞ்சலி செலுத்தினர். கொழுமம் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள், துணிக் கடைகள் காய்கறி கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணிவரை அடைக்கப்பட்டு இருந்தது.

தாராபுரம்

தாராபுரம் பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. தாராபுரம் பூக்கடை வீதி, ஜவுளிக்கடை வீதி, அரமரம் வீதி, பொள்ளாச்சி சாலை, பஸ்நிலையம், உடுமலை சாலை பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்து. பேக்கரி, ஓட்டல், ஜவுளிக்கடைகள், மளிகை கடைகள், அடைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை கடை அடைப்பு நடந்தது.

சேவூர்

சேவூர் பகுதிகளில் மளிகை கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள், காய்கறி கடைகள், பர்னிச்சர் கடைகள், இறைச்சி கடைகள், பேன்ஸி கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

மேலும் மருந்துக் கடைகள் காலை 7 மணி முதல் காலை 10 மணி வரையிலும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் பல்வேறு பகுதிகளில் ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் புகைப்படத்தை வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

பல்லடம்

பல்லடம் மகாலட்சுமி நகர் பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. அங்கு மளிகை கடை, காய்கறி கடை, எலக்ட்ரானிக்ஸ் கடை, இரும்பு மற்றும் பர்னிச்சர் கடைகள் உள்பட சுமார் 80 கடைகள் நேற்று காலை 6 மணி முதல் அடைக்கப்பட்டது. அதேபோல் இந்த கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மகாலட்சுமி நகர் பகுதியில் உள்ள மருந்து கடைக்காரர்களும் 3 மணி நேரம் கடைகளை அடைத்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

Next Story