சென்னையில் 9 ஆயிரம் தெருக்களில் தொற்று பாதிப்பு-சுகாதாரத்துறை செயலாளர் தகவல்


சென்னையில் 9 ஆயிரம் தெருக்களில் தொற்று பாதிப்பு-சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
x
தினத்தந்தி 27 Jun 2020 9:51 PM GMT (Updated: 27 Jun 2020 9:51 PM GMT)

சென்னையில் 9 ஆயிரம் தெருக்களில் தொற்று பாதிப்பு உள்ளது என்றும், நோயாளிகளை அழைத்துவர தனியார் ஆம்புலன்சுகளை பயன்படுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னை, 

சென்னையில் 9 ஆயிரம் தெருக்களில் தொற்று பாதிப்பு உள்ளது என்றும், நோயாளிகளை அழைத்துவர தனியார் ஆம்புலன்சுகளை பயன்படுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 32 ஆயிரமாகவும், சென்னையில் மட்டும் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரமாகவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. எண்ணிக்கையை வைத்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.

மருத்துவ முகாம்கள் மூலம் அதிகமான நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு வருகிறார்கள். ஏதேனும் ஒரு அறிகுறி இருந்தாலே பரிசோதனைக்கு தாமாக வருகிறார்கள். இறப்பு எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதையே அரசின் பிரதான நோக்கம்.

சென்னையில் உள்ள 39 ஆயிரம் தெருக்களில், 9 ஆயிரத்து 509 தெருக்களில் மட்டும் தான் தொற்று உள்ளது. இதில் 812 தெருக்களில் மட்டுமே 5-க்கும் மேற்பட்ட தொற்று உள்ளது. குடிசை பகுதிகளில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. கொரோனா என்றால் மரணம் என்ற எண்ணத்தில் இருந்து மக்கள் வெளியே வரவேண்டும்.

குணமடைவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோயாளிகள் தப்பித்து ஓடுவது, தற்கொலை செய்வது, நோயாளிகளை புறக்கணிப்பது உள்ளிட்ட செயல்களை தவிர்க்க வேண்டும். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் தான் அதிகமான பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது.

நோயாளிகளை அழைத்து வர கூடுதல் ஆம்புலன்ஸ் இயக்கவும், தனியார் ஆம்புலன்சுகளை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் படுக்கை வசதிகளை அதிகரிக்க பல்வேறு இடங்கள் கணக்கெடுக்கப்பட்டு, கூடுதல் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கொரோனா மரணங்களை மறைத்தல் உள்ளிட்ட குளறுபடி செய்யும் தனியார் மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story