திருவள்ளூர் அருகே வீட்டில் பதுக்கிய ரூ.10 லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல்


திருவள்ளூர் அருகே வீட்டில் பதுக்கிய ரூ.10 லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 28 Jun 2020 12:27 AM GMT (Updated: 28 Jun 2020 12:27 AM GMT)

திருவள்ளூர் அருகே பூட்டிய வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூர் அருகே பூட்டிய வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடை அருகே உள்ள பூட்டிய வீட்டுக்குள் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு, திருட்டுத்தனமாக கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து, அவரது உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத், இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் உள்ளிட்ட போலீசார் பூட்டிய வீட்டில் புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.


அப்போது அந்த வீட்டில் திருட்டுத்தனமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான பாட்டில்கள் அடங்கிய 92 பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை பிரித்து பார்த்த போது, அதில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 4,850 மதுப்பாட்டில்கள் இருந்தன.

இதைத்தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், மதுபாட்டில்களை பதுக்கி வைத்த மர்ம நபர்கள் யார் என வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story