கூடுதல் விலைக்கு பருத்தி கொள்முதல் செய்யக்கோரி விற்பனை கூடத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்


கூடுதல் விலைக்கு பருத்தி கொள்முதல் செய்யக்கோரி விற்பனை கூடத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 28 Jun 2020 1:40 AM GMT (Updated: 28 Jun 2020 1:40 AM GMT)

கூடுதல் விலைக்கு பருத்தியை கொள்முதல் செய்யக்கோரி மயிலாடுதுறை விற்பனை கூடத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குத்தாலம்,

மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பருத்தி அறுவடை தீவிரம் அடைந்து உள்ளது. விவசாயிகள் தங்கள் பருத்தியை அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் பருத்தி விலையை தமிழக அரசு முறையாக நிர்ணயம் செய்யாததால் இந்திய பருத்தி கழகம் நிர்ணயித்துள்ள விலையை விட குறைவாக விவசாயிகள் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வாரந்தோறும் சனிக்கிழமை வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் விடப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக சரியான விலை போகாததால் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம், முற்றுகை போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை

இந்த நிலையில் நேற்று விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யக்கோரி மயிலாடுதுறையில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. அங்கு விரைந்து சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விவசாயிகள், அரசு நேரடியாக நெல்லை கொள்முதல் செய்வது போல, பருத்தியையும் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என கேட்டு கொண்டனர். இதையடுத்து விவசாயிகள் மத்தியில் பேசிய எம்.எல்.ஏ., ‘கொரோனா ஊரடங்கு நெருக்கடி காரணமாக அரசு பல்வேறு நிதி நெருக்கடியில் உள்ளது. ஆனாலும் விவசாயிகள் நஷ்டம் அடைந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் ஈரப்பதம் 12 சதவீதம் என்பதை 16 சதவீதம் வரை உயர்த்தி இந்திய பருத்தி கழகம் கொள்முதல் செய்ய தயாராக உள்ளது. எனவே விவசாயிகள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.

விலை நிர்ணயம்

அப்போது நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.ஜி.கே.செந்தில்நாதன், மயிலாடுதுறை மொத்த கூட்டுறவு விற்பனை பண்டகசாலை தலைவர் அலி, ஒன்றியக்குழு துணை தலைவர் மகேஸ்வரி முருகவேல், முன்னாள் நகர கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, அரசு ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செங்குட்டுவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. முன்னதாக இந்திய பருத்தி கழக அதிகாரிகள் விவசாயிகள் கொண்டு வந்திருந்த பருத்தியை எந்திரம் மூலம் ஈரப்பதம் கணக்கிட்டு விலை நிர்ணயம் செய்தனர். இதனையடுத்து விவசாயிகள் பலர் தங்கள் கொண்டுவந்த பருத்தியை இந்திய பருத்தி கழகத்திடம் விற்பனை செய்ய முன்வந்தனர். ஒருசிலர் தங்கள் பருத்தியை நன்கு உலர்த்தி அடுத்த வாரம் நடைபெறும் ஏலத்துக்கு கொண்டு வருவதாக தெரிவித்தனர். 

Next Story