திட்டக்குடி அருகே பெருமுளை ஏரியில் மதகை உடைத்தவர்களை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


திட்டக்குடி அருகே பெருமுளை ஏரியில் மதகை உடைத்தவர்களை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Jun 2020 3:02 AM GMT (Updated: 28 Jun 2020 3:02 AM GMT)

திட்டக்குடி அருகே பெருமுளை ஏரியில் மதகை உடைத்தவர்களை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திட்டக்குடி,

திட்டக்குடியை அடுத்த பெருமுளை ஊராட்சியில் 136 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரி அப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாய நிலத்தின் பயன்பாட்டுக்கும் பயன்பட்டு வருகிறது. கீழ்செருவாய் வெலிங்டன் நீர்தேக்கத்தின் மூலம் இந்த ஏரிக்கு ஆண்டுதோறும் தண்ணீர் வருவது வழக்கம். கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்து 15 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்பட்டது. திறந்துவிடப்பட்ட தண்ணீர் வெலிங்டன் நீர்த்தேக்கத்தின் மூலம் பாசனம் பெறும் 24 ஏரிகளுக்கு தண்ணீர் வந்தது. அதில் பெருமுளை ஏரியும் நிரம்பியது. இதையடுத்து மீன்வளத்துறை மூலம் ஏரியில் மீன் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மர்மநபர்கள் சிலர் நேற்று முன்தினம் இரவு ஏரியில் உள்ள இரண்டு மதகுகளை உடைத்து தண்ணீரை வெளியேற்றினர். இதனால் ஏரியை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் வீணாக புகுந்தது.

ஆர்ப்பாட்டம்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி விவசாயிகள் ஏரியின் மதகு உடைந்த இடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஏரி தண்ணீரை வெளியேற்றிய சமூகவிரோதிகளை கைது செய்ய வேண்டும், மீன் குத்தகைதாரர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேல், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சோழராஜா, சமூக நலதிட்ட தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் விவசாயிகள் மீன் குத்தகைதாரர்கள் மீன் பிடிக்க கூடாது அப்படி பிடித்தால் அவர்களை நாங்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபடபோவதாக கூறினர். பின்னர் அதிகாரிகள் கூறுகையில், இது குறித்து உயர் அதிகாரிகளிடம் கூறி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்று விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story