கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை: கேத்தி பேரூராட்சியில் 6 கிராமங்களுக்கு ‘சீல்’


கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை: கேத்தி பேரூராட்சியில் 6 கிராமங்களுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 28 Jun 2020 3:45 AM GMT (Updated: 28 Jun 2020 3:45 AM GMT)

கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கேத்தி பேரூராட்சியில் 6 கிராமங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது. மேலும் சுகாதார பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள எல்லநள்ளி பகுதியில் தனியார் ஊசி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் மக்கள் தொடர்பு அலுவலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து தொழிற்சாலை மூடப்பட்டது. மேலும் தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள், ஊழியர்கள் என மொத்தம் 755 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் தங்களை வீடுகளிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் சிலர் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளாமல் வெளியே சென்று வருவது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் கொரோனா பாதித்த மக்கள் தொடர்பு அலுவலருடன் முதல் நிலை, இரண்டாம் நிலை தொடர்பில் இருந்த 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் வசித்து வந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் அறிகுறிகள் தென்பட்டால் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

6 கிராமங்களுக்கு ‘சீல்’

இந்த நிலையில் நேற்று கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லநள்ளி, உல்லாடா, கேத்தி, பிரகாசபுரம், மந்தாடா, அச்சனக்கல் ஆகிய 6 கிராமங்களுக்கு ‘சீல்’ வைக்க கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார். அதன்படி மேற்கண்ட கிராமங்களின் எல்லைகள், சாலைகளில் தடுப்புகள் அமைத்து ‘சீல்’ வைத்து மூடப்பட்டன. மேலும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, உரிய அனுமதியின்றி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று உத்தரவிட்டு உள்ளது. இதை கண்காணிக்க போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளியாட்களுக்கு அனுமதி இல்லை

இதற்கிடையில் திறக்கப்பட்டு இருந்த கடைகளை போலீசார் அடைக்கும்படி கூறியதையடுத்து கடைகள் அனைத்தும் உடனடியாக அடைக்கப்பட்டன. பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அந்த கிராமங்கள் வழியாக அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் செல்ல தடை இல்லை. ஆனால் வெளியாட்கள் உள்ளே வர அனுமதி இல்லை. ‘சீல்’ வைக்கப்பட்ட கிராமங்களுக்கு சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அங்கு கேத்தி பேரூராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிப்பு, பிளச்சிங் பவுடர் போடுவது, கால்வாய்களை சுத்தம் செய்வது போன்ற சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Next Story