திருப்பூர் மாவட்டத்தில் வங்கி அதிகாரி உள்பட 9 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 147 ஆக உயர்வு


திருப்பூர் மாவட்டத்தில் வங்கி அதிகாரி உள்பட 9 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 147 ஆக உயர்வு
x
தினத்தந்தி 28 Jun 2020 3:57 AM GMT (Updated: 28 Jun 2020 3:57 AM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் வங்கி அதிகாரி உள்பட 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் தற்போது 147 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன் பின்னர் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக திருப்பூர் இருந்து வந்தது. இதன் பின்னர் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பலரும் திருப்பூருக்கு வர தொடங்கினர். பின்னலாடை நிறுவனங்களும் செயல்பட தொடங்கின. இதனால் பச்சை மண்டலமாக திருப்பூர் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு திருப்பூரில் அதிகரித்து வருகிறது. வெளிஊர்களில் இருந்து வருகிறவர்கள் மூலம் இந்த தொற்று பரவ தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைய தொடங்கியுள்ளனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால் திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர்.

9 பேருக்கு கொரோனா

இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மேல்சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பகுதிகளில் அனைத்திலும் சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.

மேலும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களது பரிசோதனை முடிவுகள் வரும் வரை வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 147ஆக உயர்ந்துள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்

இது குறித்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூருக்கு சென்று வந்த உடுமலையை சேர்ந்த 30 வயது ஆண், 30 வயது பெண், 5 வயது சிறுவன், 7 வயது சிறுவன் ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர், கோவையில் இருந்து திருப்பூருக்கு வந்த 15 வேலம்பாளையம் கிரான்ட் கேட் அவென்யூவை சேர்ந்த 29 வயது பெண், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பணி மாறுதல் ஆகி திருப்பூருக்கு வந்த தென்னம்பாளையத்தை சேர்ந்த 31 வயது பெண், கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்த காங்கேயம் ராம்நகரை சேர்ந்த 58 வயது உடைய வங்கி அதிகாரி, தேனியில் இருந்து வந்த வீரபாண்டியை சேர்ந்த 40 வயது பெண், 20 வயது பெண் ஆகிய 9 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவருக்கும் மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் சென்னை சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டிருந்த கொரோனா பாதிப்பு பட்டியலில் திருப்பூர் மாவட்டத்தில் 141 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

147 ஆக உயர்வு

இதில் 4 பேர் வெளிமாவட்டங்களில் இருந்து திருப்பூருக்கு வந்தவர்கள் என்பதால், அவர்களது பாதிப்பு கணக்கு வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. அதன்படி திருப்பூரில் 137 பேர் என கணக்கிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், பாதிப்பு 146 ஆக இருந்தது. மேலும், எகிப்தில் இருந்து வந்த உடுமலை பெண்ணின் கொரோனா பாதிப்பு கணக்கு திருப்பூரிலேயே இணைக்கப்பட்டுள்ளது. அதனையும் சேர்த்து மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 147 ஆக உயர்ந்துள்ளது என சென்னை சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் நேற்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், நேற்று திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 70 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களின் பரிசோதனை முடிவும் விரைவில் தெரியவரும். இதில் தொற்று உள்ளவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story