திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 குழந்தைகள் உள்பட 127 பேருக்கு கொரோனா


திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 குழந்தைகள் உள்பட 127 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 28 Jun 2020 5:39 AM GMT (Updated: 28 Jun 2020 5:39 AM GMT)

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 குழந்தைகள் உள்பட 127 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாளுக்கு நாள் மக்களிடையே அதிகமாக வைரஸ் பரவி வருகிறது. ஆயிரத்தை கடந்ததால் மாவட்ட நிர்வாகம் இந்த தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. மக்களுக்களிடையே சமூக இடைவெளி குறித்தும் முககவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் வைரஸ் பாதிப்பானது முந்தைய நாட்களை விட தற்போது அதிவேகமாக உயர்ந்து வருகிறது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 127 பேர் இடம் பெற்று உள்ளனர். இது திருவண்ணாமலை மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

8 குழந்தைகள்

அதன்படி பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக நாவல்பாக்கத்தில் 27 பேர் உள்ளனர். மேலும் காட்டாம்பூண்டியில் 17 பேர், வந்தவாசியில் 8 பேர், புதுப்பாளையத்தில் 3 பேர், கீழ்பென்னாத்தூரில் 2 பேர், கலசபாக்கத்தில் 2 பேர், செங்கத்தில் 8 பேர், தண்டராம்பட்டுவில் 18 பேர், போளூரில் 5 பேர், திருவண்ணாமலை நகராட்சியில் 17 பேர், சேத்துப்பட்டில் 2 பேர், ஆரணியில் 5 பேர், ஆக்கூரில் 4 பேர், தெள்ளாரில் 2 பேர், எஸ்.வி.நகரத்தில் 4 பேர், தச்சூரில் 5 பேர் மற்றும் வேட்டவலம், பெரணமல்லூர் பெருங்கட்டூரில் தலா ஒருவர் வைரஸ் தொற்றுக்கு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இவர்களில் 8 குழந்தைகளும் அடங்கும்.

1619 ஆக உயர்வு

பாதிக்கப்பட்டவர்களில் பெங்களூருவில் இருந்து 13 பேரும், சென்னையில் இருந்து 7 பேரும், பிற மாவட்டங்களில் வந்தவர்களும் உள்ளனர். ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 43 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,619 ஆக உயர்ந்துள்ளது.

Next Story