வியாபாரி-மகன் சாவு:சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்


வியாபாரி-மகன் சாவு:சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 28 Jun 2020 11:31 PM GMT (Updated: 28 Jun 2020 11:31 PM GMT)

சாத்தான்குளம் சம்பவத்தில் தந்தை-மகன் உயிரிழந்தது தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சாத்தான்குளம்,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் ஊரடங்கை மீறி, தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட தந்தையும், மகனும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதையடுத்து சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் 2 ஏட்டுகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அங்கு பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மேலும் அந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய மற்ற அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஸ்ரீதரை பணியிடை நீக்கம் செய்து, நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட்டார்.

மேலும் நாகர்கோவில் வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர், சாத்தான்குளத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் விரைவில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பொறுப்பு ஏற்க உள்ளார்.

Next Story