செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா


செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா
x
தினத்தந்தி 29 Jun 2020 12:07 AM GMT (Updated: 29 Jun 2020 12:07 AM GMT)

செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ.வுக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

செஞ்சி,

கொரோனாவுக்கு மக்கள் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை ஏற்கனவே தி.மு.க.வை சேர்ந்த சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் உயிரை கொரோனா பறித்து விட்டது. இதை தொடர்ந்து தி.மு.க.வை சேர்ந்த ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், செய்யூறு தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.டி. அரசு மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் மேலும் ஒரு தி.மு.க. எம்.எல்.ஏ. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் செஞ்சி மஸ்தான்(வயது 65). இவர் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் இருந்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. சோர்வடைந்து காணப்பட்ட அவர், விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற சென்றார். அப்போது டாக்டர்களின் ஆலோசனையின் பேரில், செஞ்சியை அடுத்த ஒட்டம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரது உமிழ்நீர் எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது.

தி.மு.க.வை சேர்ந்த 4-வது எம்.எல்.ஏ.

இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள லேகா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தி.மு.க.வை சேர்ந்த 4-வது எம்.எல்.ஏ. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது அந்த கட்சியை சேர்ந்தவர்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

நிவாரண உதவி

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. நிவாரண பொருட்களை வழங்கி வந்தார். நேற்று முன்தினமும் சில நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார்.

மேலும் அரசு அதிகாரிகளை சந்தித்து, மக்கள் பிரச்சினை தொடர்பாக மனுக்களையும் அவர் வழங்கினார். இந்த சூழலில் அவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பது செஞ்சி பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே செஞ்சியில் உள்ள எம்.எல்.ஏ.வின் வீடு அமைந்துள்ள பகுதியில் தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது. 

Next Story