புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 167 ஆக உயர்வு


புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 167 ஆக உயர்வு
x
தினத்தந்தி 29 Jun 2020 1:06 AM GMT (Updated: 29 Jun 2020 1:06 AM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. தினமும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை பெரியார்நகரை சேர்ந்த 26 வயது வாலிபர், 45 வயது ஆண், பேலஸ் நகரை சேர்ந்த 48 வயது ஆண், தென்றல் மனரா அருகே 22 வயது வாலிபர், மாலையீடை சேர்ந்த 38 வயது ஆண், காமராஜபுரத்தை சேர்ந்த 25 வயது பெண், டி.வி.நகர் 2-வது தெருவை சேர்ந்த 25 வயது பெண், டி.வி.நகர் 3-வது தெருவை சேர்ந்த 38 வயது பெண், கோல்டன் நகரை சேர்ந்த 16 வயது சிறுமி, பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 49 வயது ஆண், கலீப்நகரை சேர்ந்த 55 வயது பெண், அதே பகுதியில் மேற்கு தெருவை சேர்ந்த 46 வயது பெண் ஆகியோருக்கு தொற்று உறுதியாகி இருந்தது.

இதேபோல் அரசமலையை சேர்ந்த 39 வயது ஆண், புதுப்பட்டியை சேர்ந்த 49 வயது ஆண், 6 வயது சிறுவன், 32 வயது ஆண், திருப்புனவாசல் அருகே 28 வயது ஆண் ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் வடுகநாதன் சாலையில் மதுரையில் இருந்து வந்த ஒருவருக்கும், சென்னையில் இருந்து வந்த மேலைச்சிவபுரி ஊராட்சியை சேர்ந்த ஒருவருக்கும், தொட்டியம்பட்டி ஊராட்சியில் 2 பேருக்கும், பொன்னமராவதி ஒன்றியம் மதியாணியில் 8 பேருக்கும், பொன்னமராவதி மற்றும் பொன்.புதுவளைவு பகுதிகளில் 5 பேருக்கும், அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியை சேர்ந்த 50 வயது பெண்ணுக்கும் என மொத்தம் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

167 ஆக உயர்வு

மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 167 ஆக உயர்ந்துள்ளது. 117 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 48 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். ஒருவர் பலியாகி உள்ளார். கொரோனா பாதித்த ஒருவர் தற்கொலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று கொரோனா பாதித்தவர்களில் 17 பேர் பொன்னமராவதி பேரூராட்சி மற்றும் ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கொரோனா பாதித்தவர்கள் வசித்த பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, அப்பகுதிகளில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதேபோல் முக்கண்ணாமலைப்பட்டி பகுதியிலும் சுகாதார பணிகள் நடைபெற்றது.

Next Story