சார்ஜாவில் இருந்து விமானத்தில் வந்த 30 பயணிகள் தனியார் ஓட்டலில் தங்க பொதுமக்கள் எதிர்ப்பு


சார்ஜாவில் இருந்து விமானத்தில் வந்த 30 பயணிகள் தனியார் ஓட்டலில் தங்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 29 Jun 2020 1:20 AM GMT (Updated: 29 Jun 2020 1:20 AM GMT)

சார்ஜாவில் இருந்து விமானத்தில் வந்த 30 பயணிகளை தனியார் ஓட்டலில் தங்க வைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மலைக்கோட்டை,

சார்ஜாவில் இருந்து விமானத்தில் 60 பேர் நேற்று திருச்சி வந்தனர். கொரோனா பரவலை தடுப்பதற்காக அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற அரசின் விதிமுறைப்படி அவர்களில் 30 பேர் விமான நிலையத்தில் இருந்து ஒரு பஸ்சில் ஏற்றி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அந்த பஸ் குறிப்பிட்ட ஓட்டல் முன் வந்து நின்றதும் வெனிஸ் தெரு, காந்தி நகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். அவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்துள்ள பயணிகளை தனியார் ஓட்டலில் தங்க வைப்பதற்கு அனுமதிக்க கூடாது. அவர்களால் இப்பகுதி மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தாசில்தார் பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்ததும் திருச்சி கிழக்கு தாசில்தார் மோகன் அங்கு வந்து சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து அந்த பயணிகள் 30 பேரும் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story