யூ-டியூப் பார்த்து கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட கூடலூர் வாலிபர் - போலீசார் கைது செய்து தீவிர விசாரணை


யூ-டியூப் பார்த்து கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட கூடலூர் வாலிபர் - போலீசார் கைது செய்து தீவிர விசாரணை
x
தினத்தந்தி 29 Jun 2020 9:51 PM GMT (Updated: 29 Jun 2020 10:26 PM GMT)

யூ-டியூப் பார்த்து கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட கூடலூர் வாலிபரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

கூடலூர்,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு அப்துல் கரீமுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் கொண்டோட்டி இன்ஸ்பெக்டர் பிஜூ தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மலப்புரம் பஜாரில் சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் நடந்து சென்றார். உடனே அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர், நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா கோழிப்பாலம் அருகே உள்ள பள்ளிப்பாடி பகுதியை சேர்ந்த மோகன் என்பவரது மகன் சதீஷ்(வயது 24) என்பது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் சோதனையிட்டனர். அப்போது அவரிடம் ரூ.4 ஆயிரத்துக்கு கள்ள ரூபாய் நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, போலீஸ் நிலையம் அழைத்து சென்று, தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:- கடந்த 2011-ம் ஆண்டு மது குடித்துவிட்டு தகராறு செய்த எனது தந்தையை கொலை செய்துவிட்டு, ஜாமீனில் வெளியே வந்தேன். பின்னர் நானும், எனது தாயும் கேரள மாநிலம் மஞ்சேரியில் வாடகை வீட்டில் வசித்து வந்தோம். தொடர்ந்து அங்குள்ள ஓட்டலில் தங்கியிருந்து, தொழிலாளியாக வேலை செய்து வந்தேன். ஊரடங்கால் வேலையிழந்து, வருமானமின்றி ஓட்டல் அறையிலேயே தங்கி இருந்தேன்.

இதனால் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது என முடிவு செய்தேன். அதற்கு தேவையான ஜெராக்ஸ் எந்திரத்தை வாங்கினேன். பின்னர் யூ-டியூப் சேனல்களை பார்த்து இரவில் கண் விழித்து 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து, மலப்புரம் மாவட்டத்தில் புழக்கத்தில் விட்டேன். பெட்ரோல் நிலையங்கள், மதுக்கடைகள், மளிகை கடைகள் என பணப்புழக்கம் அதிகரித்து இருக்கும் இடங்களில் கள்ள நோட்டுகளை மாற்றுவது எளிதாக இருந்தது. தற்போது 200 ரூபாய் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட சென்றபோது, போலீசிடம் சிக்கி கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அவரிடம் இருந்த ஜெராக்ஸ் எந்திரம், மற்றும் கள்ள ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story