கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்தார்


கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 30 Jun 2020 1:01 AM GMT (Updated: 30 Jun 2020 1:01 AM GMT)

மராட்டியத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கும் திட்டத்தை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்தார்.

மும்பை,

உலக நாடுகளை தனது கோரப்பிடியால் நடுநடுங்க வைத்து வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. வெவ்வேறு மருந்துகள் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் ரத்த பிளாஸ்மாவை எடுத்து, அதை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிளாஸ்மா தெரபி சிகிச்சை முறையும் கொரோனா நோயாளிகளை குணப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) அனுமதியை தொடர்ந்து, மராட்டியத்தில் சோதனை முயற்சியாக பிளாஸ்மா சிகிச்சை முறை தொடங்கப்பட்டது.

இந்தநிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையை அளிக்கும் திட்டத்தை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று தொடங்கி வைத்தார்.

இதுபற்றி மாநில சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பிளாட்டினா என்று பெயரிடப்பட்ட இந்த திட்டம் உலகின் மிகப்பெரிய பிளாஸ்மா தெரபி மற்றும் சோதனை திட்டமாகும். இதன் மூலம் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள 500 நோயாளிகளின் உயிரை காப்பாற்ற உத்தேசித்துள்ளோம். அவர்களுக்கு 200 மில்லி அளவுள்ள பிளாஸ்மா 2 டோஸ் இலவசமாக வழங்கப்படும். மருத்துவ கல்வி மற்றும் மருந்துகள் துறையின் கீழ் உள்ள 17 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும், மும்பையில் மாநகராட்சியின் 4 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் இந்த சோதனை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story