ஊழியருக்கு கொரோனா: கோவில்பட்டி தபால் நிலையம் மூடப்பட்டது


ஊழியருக்கு கொரோனா: கோவில்பட்டி தபால் நிலையம் மூடப்பட்டது
x
தினத்தந்தி 1 July 2020 12:28 AM GMT (Updated: 1 July 2020 12:28 AM GMT)

கோவில்பட்டி தலைமை தபால் நிலையத்தில் ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தபால் நிலையம் மூடப்பட்டது. மேலும் தற்காலிக சந்தையில் வியாபாரிகள் உள்பட 7 பேருக்கு தொற்று உறுதியானது.

கோவில்பட்டி,

கோவில்பட்டி தலைமை தபால் நிலையத்தில் 30 வயது வாலிபர் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டிக்கு வந்து சென்றார். கடந்த 28-ந்தேதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று முன்தினம் மாலையில் உறுதி செய்யப்பட்டது. அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து நேற்று காலை கோவில்பட்டி நகராட்சி அலுவலர்கள் தலைமை தபால் நிலையத்துக்கு வந்து கிருமி நாசினி தெளித்தனர். பின்னர் தபால் நிலையமும், அந்த கட்டிடத்தின் முதல் மாடியில் செயல்பட்டு வரும் கோட்ட அலுவலகமும் மூடப்பட்டது. அலுவலகங்கள் 48 மணி நேரம் மூடப்பட்டிருக்கும், பின்னர் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் தபால் அலுவலகத்துக்கு வந்திருந்த ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதேபோல், கடந்த 28-ந்தேதி கோவில்பட்டி நகராட்சி சார்பில் காந்தி மைதானத்தில் செயல்படும் தற்காலிக தினசரி சந்தை வியாபாரிகள், ஊழியர்கள் மற்றும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், 4 வியாபாரிகள் உள்பட 7 பேருக்கு தொற்று உறுதி செய் யப்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டனர். மேலும், தற்காலிக தினசரி சந்தையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Next Story