தொற்று அதிகரிப்பு எதிரொலி: குமரியில் கடைகளை திறக்க கட்டுப்பாடு - கலெக்டர் தகவல்


தொற்று அதிகரிப்பு எதிரொலி: குமரியில் கடைகளை திறக்க கட்டுப்பாடு - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 1 July 2020 1:10 AM GMT (Updated: 1 July 2020 1:10 AM GMT)

குமரி மாவட்டத்தில் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகர்கோவில்,

வெளியிடங்களில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் இல்லாமல் குமரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல் மாவட்டத்திற்குள் வாகனங்களில் செல்ல இ-பாஸ் தேவையில்லை. குமரி மாவட்டத்தில் நோய்த்தொற்று அதிகம் பரவி வருவதை தொடர்ந்து அனைத்து கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஓட்டல்களும், மருந்து கடைகளும் வழக்கம் போல் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தங்களது பகுதிக்கு வரும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

நேற்று முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித்திரிந்த 225 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.22 ஆயிரத்து 500 வசூலானது. நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இதுவரை மொத்தம் 44 ஆயிரத்து 866 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

Next Story