அண்ணன்-தம்பி வெட்டிக்கொலை: 10 பேருக்கு ஆயுள் தண்டனை கடலூர் கோர்ட்டு தீர்ப்பு


அண்ணன்-தம்பி வெட்டிக்கொலை: 10 பேருக்கு ஆயுள் தண்டனை கடலூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 1 July 2020 1:41 AM GMT (Updated: 1 July 2020 1:41 AM GMT)

ரெட்டிச்சாவடியில் அண்ணன்-தம்பி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு உத்தரவிட்டது. இதுபற்றிய விவரம் வருமாறு.

கடலூர்,

கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலைய தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன்கள் வினோத்குமார் (வயது 21), சதீஷ்குமார்(19). வினோத்குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த செங்கேணி மகன் லட்சுமணன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் வினோத்குமார் வீட்டுக்கு சிலர் வந்து தங்கினர். இதுபற்றி அறிந்த லட்சுமணன், தன்னை கொலை செய்யத் தான் வினோத்குமார் சதித்திட்டம் தீட்டுகிறார் என நினைத்தார்.

பின்னர் அவர் கடந்த 21.5.2016 அன்று தனது ஆதரவாளர்கள் முருகன் மகன் டேவிட்(24), ஏழுமலை மகன் பாலமுருகன்(24), பெருமாள் மகன் சவுந்தர்ராஜன்(23), நடராஜன் மகன் அருண்குமார்(26), ராமு மகன் சதீஷ்(24), அருள்மணி மகன் ஆனந்தராஜ்(24), கருணாகரன் மகன் ராஜ்குமார்(24), கண்ணப்பன் மகன் கணபதி(23), ஆறுமுகம் மகன் சுமன்(25) ஆகியோருடன் வினோத்குமார் வீட்டுக்கு சென்றார்.

அப்போது அங்கிருந்த சதீஷ்குமாரிடம், லட்சுமணன் உள்ளிட்டோர் வினோத்குமார் பற்றி கேட்டனர். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த லட்சுமணன் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சதீஷ்குமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இருப்பினும் ஆத்திரம் தீராத லட்சுமணன், வீடு முழுவதும் வினோத்குமாரை தேடினார். அப்போது அங்குள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த வினோத்குமாரையும் அவர்கள் வெட்ட முயன்றனர்.

இதில் பதறிய அவர் வீட்டில் இருந்து வெளியேறி தெருவில் ஓடினார். ஆனால் லட்சுமணன் உள்ளிட்டோர் ஓட ஓட விரட்டிச் சென்று வினோத்குமாரை வெட்டிக் கொலை செய்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்குப்பதிவு செய்து லட்சுமணன், சவுந்தர்ராஜன், அருண்குமார், ஆனந்தராஜ், ராஜ்குமார், கணபதி, சுமன் ஆகியோரை கைது செய்தார். மேலும் தலைமறைவாக இருந்த டேவிட், பாலமுருகன், சதீஷ் ஆகியோரை தேடி வந்தார்.

இந்நிலையில் டெல்டா பிரிவு போலீசார் உதவியுடன் கடந்த நவம்பர் மாதம் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் பதுங்கி இருந்த டேவிட், பாலமுருகன், சதீஷ் ஆகியோரை ரெட்டிச்சாவடி போலீசார் கைது செய்தனர்.

பின்னர் இதுதொடர்பாக கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்ததையடுத்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

இதில் நீதிபதி செந்தில்குமார் தனது தீர்ப்பில், லட்சுமணனுக்கு 2 ஆயுள் தண்டனையும், ரூ.7,500 அபராதமும், டேவிட், பாலமுருகன், சவுந்தர்ராஜன், அருண்குமார், சதீஷ், ஆனந்தராஜ், ராஜ்குமார், கணபதி, சுமன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.4500 அபராதமும் விதித்தார். அரசு தரப்பில் வக்கீல் பாஸ்கர் ஆஜராகி வாதாடினார். இரட்டை கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story