கொரோனா விதிமீறல்: பறக்கும் படை மூலம் ரூ.25½ லட்சம் அபராதம் வசூல்


கொரோனா விதிமீறல்: பறக்கும் படை மூலம் ரூ.25½ லட்சம் அபராதம் வசூல்
x
தினத்தந்தி 1 July 2020 1:59 AM GMT (Updated: 1 July 2020 1:59 AM GMT)

கொரோனா விதிமுறையை மீறியதாக மதுரை மாவட்டத்தில் பறக்கும் படை மூலம் ரூ.25½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரை மாவட்ட கலெக்டர் வினய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

பொதுமக்களிடையே முக கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போதுமான அளவு விழிப்புணர்வு இல்லாததால் மதுரை நகரில் பொதுமக்கள் முக கவசம் அணிவதை கண்காணிக்கவும், கடைகள் அனைத்தும் வரையறுக்கப்பட்ட நேரத்திற்குள் அடைப்பதை கண்காணிக்கவும், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிப்பதை கண்காணிக்கவும் வருவாய்த்துறை, காவல்துறை, மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய 10 பறக்கும் படை குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் மதுரை மாநகராட்சி, கிழக்கு ஒன்றியம், மேற்கு ஒன்றியம், பரவை பேரூராட்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 23-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை மேற்கொண்ட சோதனைகளின் மூலம் முக கவசம் அணியாத 891 பேரிடம் இருந்து ரூ.1,56,060, சமூக இடைவெளியை கடைபிடிக்காத 185 பேரிடம் ரூ.34,900 விதித்துள்ளனர். மேலும் இதர வகையில் ரூ.66,100 மற்றும் சீல் வைக்கப்பட்ட கடைகள் 43 என மொத்தம் 1,119 நபர்களிடமிருந்து அபராத தொகையாக ரூ.25 லட்சத்து 57 ஆயிரத்து 60 வசூல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story