தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.10 கோடியில் வளர்ச்சி பணிகள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்


தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.10 கோடியில் வளர்ச்சி பணிகள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 1 July 2020 2:48 AM GMT (Updated: 1 July 2020 2:48 AM GMT)

தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.10 கோடியில் வளர்ச்சி பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

கோவை,

கோவை தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளான இக்கரை போளுவாம்பட்டி, மத்வராயபுரம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் ஆலாந்துறை பேரூராட்சி ஆகிய பகுதிகளில் நேற்று நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்ததுடன், பல்வேறு புதிய பணிகளுக்கு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், மேம்படுத்தப்பட்ட சாலைகள், காந்திபுரம் மேம்பாலங்கள், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ்நிலையம், அத்திக்கடவு அவினாசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்கான திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

நகரப்பகுதிகளுக்கு இணையாக பல்வேறு மேம்பட்ட வளர்ச்சி பணிகளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில், சாலை, குடிநீர், சிறுபாலங்கள், பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், கழிப்பறைகள், அங்கன்வாடி மைய கட்டிடங்கள் போன்றவற்றை சிறப்பாக அமைத்து வளர்ச்சி திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்வராயபுரம் ஊராட்சியில் ரூ.9.08 லட்சத்தில் தொம்புலிபாளையம் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணி, ஆலாந்துறை பேரூராட்சியில் மூங்கில்மடைக்குட்டை பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ.5.50 கோடியில் 64 குடியிருப்புகள் கட்டும் பணி, மத்வராயபுரம் ஊராட்சி இருட்டுப்பள்ளம் சிறுவாணி மெயின் ரோடு முதல் ஸ்ரீகார்டன் வரை ரூ.10 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, ரூ.9.08 லட்சத்தில் நல்லூர்பதியில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணி, என மொத்தம் ரூ.5.78 கோடியிலான வளர்ச்சி பணிகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.

மேலும், ஆலாந்துறை பேரூராட்சியில் முதலீட்டு மானிய நிதியிலிருந்து ரூ.19.64 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்ட 2 புதிய வகுப்பறை கட்டிடங்கள், ரூ.2.47 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் கிளாஸ், இக்கரைபோளுவாம்பட்டி ஊராட்சியில் நபார்டு திட்டத்திலிருந்து ரூ.3 கோடியே 20 லட்சத்தில் செம்மேடு சாலை முதல் தொம்புலிபாளையம் நொய்யல் ஆறு வரை அமைக்கப்பட்ட உயர்மட்ட பாலம்.

மத்வராயபுரம் ஊராட்சியில் தாய்சேமிப்பு நிதியிலிருந்து ரூ.12 லட்சத்தில் தொம்புலிபாளையத்தில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை, ஏஞ்சல் கார்டன் பகுதியில் அம்மா பார்க் திட்டத்திலிருந்து ரூ.30 லட்சத்தில் அமைக்கப்பட்ட அம்மா பார்க், அம்மா ஜிம், இக்கரைபோளுவாம்பட்டி ஊராட்சி செம்மேடு காந்தி காலனியில் ரூ.16.85 லட்சத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு மையக்கட்டிடத்திற்கு உணவுக்கூடம், ரூ.11.13 லட்சத்தில் அமைக்கப்பட்ட உணவு தானிய கிடங்கு என மொத்தம் ரூ.4.12 கோடியிலான கட்டிடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமதுரை முருகன், மாவட்ட ஊரக வளாச்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மதுமதி விஜயகுமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பிரதீப், உதவி இயக்குனர்(பேரூராட்சிகள்) துவராகநாத்சிங் மற்றும் மாவட்ட பொருளாளர் என்.எஸ்.,கருப்புசாமி, மாவட்ட இணைச் செயலாளர் என்.கே செல்வதுரை, மாவட்ட ஜெ.,பேரவை இணைச் செயலாளர் ஜி.கே.விஜயகுமார், ஆலாந்துறை முன்னாள் தலைவர் மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர்கள் எம்.மோகன்ராஜ், பி.செல்வராஜ், ஊராட்சி தலைவர்கள் ஏ.சதானந்தம், பி.கிட்டுசாமி, ஊராட்சி செயலாளர்கள் வி.தேவி, எம்.நாகராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story