பிரபல ரவுடி கொலையில் 3 பேர் கைது பழிக்குப்பழி வாங்கியதாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம்


பிரபல ரவுடி கொலையில் 3 பேர் கைது பழிக்குப்பழி வாங்கியதாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 1 July 2020 11:30 PM GMT (Updated: 1 July 2020 9:46 PM GMT)

புதுவையில் பிரபல ரவுடி வெட்டிக் கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, 

புதுவையில் பிரபல ரவுடி வெட்டிக் கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றொரு ரவுடி கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த சம்பவம் நடந்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

பிரபல ரவுடி கொலை

புதுவை கோவிந்தசாலையை சேர்ந்தவர் அமல்தாஸ் (வயது35). பிரபல ரவுடியான இவர் வெடிகுண்டு தயாரிப்பதில் கைதேர்ந்தவர். கடந்த 29-ந்தேதி முதலியார்பேட்டை தோப்பு மாரியம்மன் கோவில் அருகே மீன்பிடி துறைமுகம் செல்லும் சாலையில் முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அமல்தாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வந்தனர்.

3 பேர் சிக்கினர்

இதில், சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் சேர்ந்து ரவுடி அமல்தாஸ் மது குடித்தது தெரியவந்தது. அவர்களை பற்றிய விவரம் தெரியவந்ததையடுத்து அரியாங்குப்பம் விஜி(34), அவ்வையார் நகர் திலீப் (30) விடுதலை நகர் குடியிருப்பு பகுதி ஜான் ஆகியோரை பிடித்து கொரோனா மருத்துவ பரிசோதனைக்காக கதிர்காமம் சிறப்பு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பான ஆய்வக முடிவில் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இதன்பின் அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து போலீசார் அதிரடியாக விசாரித்தனர். இதில், ஏற்கனவே ரவுடி கழுவா செந்தில் கொலையில் அமல்தாசுக்கு தொடர்பு இருந்ததால் அவரை பழிக்குப்பழியாக கொலை செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

பழிக்குப்பழி

ரவுடி அமல்தாசை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து கைதான விஜி, திலீப், ஜான் ஆகியோர் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

புதுச்சேரி கோவிந்தசாலையை சேர்ந்தவர் கழுவா செந்தில். ரவுடியான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு அமல்தாஸ் உதவி செய்துள்ளார். இதனால் தனது நண்பர் என்ற போதிலும் அமல்தாஸ் மீது கழுவா செந்திலின் கூட்டாளியான விஜிக்கு ஆத்திரம் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் விஜியை அமல்தாஸ் தாக்கியதாக தெரிகிறது.

இதனால் அவர்களுக்குள் தகராறு முற்றியதை தொடர்ந்து அமல்தாசை கொலை செய்ய முடிவு செய்த விஜி அதற்கான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தார். இந்தநிலையில் கடந்த 18-ந்தேதி கழுவா செந்திலின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்ட நிலையில் இதில் கலந்து கொண்ட விஜி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அமல்தாசை கொலை செய்வது குறித்து திட்டம் வகுத்துள்ளார்.

அதன்படி கடந்த 29-ந்தேதி அமல்தாசை மது விருந்து கொடுப்பது போல் அழைத்து கழுவா செந்தில் கொலை தொடர்பாக விசாரித்து விஜி மற்றும் அவரது கூட்டாளிகள் கத்தியால் வெட்டியும் கல்லால் தாக்கியும் கொலை செய்து விட்டு தலைமறைவாகி விட்டனர். தனித்தனியாக பதுங்கி இருந்த அவர் களை முதலியார்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story