வத்தலக்குண்டுவில் பரிதாபம்: குடும்ப பிரச்சினையில் தம்பதி தற்கொலை


வத்தலக்குண்டுவில் பரிதாபம்: குடும்ப பிரச்சினையில் தம்பதி தற்கொலை
x
தினத்தந்தி 2 July 2020 1:01 AM GMT (Updated: 2 July 2020 1:01 AM GMT)

வத்தலக்குண்டுவில் குடும்ப பிரச்சினை காரணமாக, தூக்க மாத்திரைகளை தின்று தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.

வத்தலக்குண்டு,

வத்தலக்குண்டுவில் குடும்ப பிரச்சினை காரணமாக, தூக்க மாத்திரைகளை தின்று தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.

குடும்ப பிரச்சினை

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்திநகரை சேர்ந்தவர் மகுடீஸ்வரன் (வயது 55). எல்.ஐ.சி. முகவர். அவருடைய மனைவி சிவகாமி (50). இவர்களுக்கு காயத்ரி (25) என்ற மகள் உள்ளார். இவருக்கு திருமணமாகி ஆண் குழந்தை உள்ளது. காயத்ரிக்கும், அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் தனது கணவரிடம் கோபித்து கொண்டு காயத்ரி தனது பெற்றோர் வீட்டுக்கு குழந்தையுடன் வந்து விட்டார். தனது மகள் கணவரை பிரிந்து வந்ததால் மகுடீஸ்வரனும், சிவகாமியும் கவலை அடைந்தனர். மேலும் இதுதொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குடும்ப பிரச்சினையால் மனவேதனையில் இருந்து வந்த மகுடீஸ்வரனும், அவரது மனைவி சிவகாமியும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.

தம்பதி தற்கொலை

அதன்படி அவர்கள் 2 பேரும், நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்றனர். சிறிதுநேரத்தில் அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதற்கிடையே நேற்று காலை காயத்ரி, தனது பெற்றோர் அறைக்கு சென்று பார்த்தார். அப்போது 2 பேரும் இறந்த நிலையில் கிடந்ததை கண்டு கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் மகுடீஸ்வரன், சிவகாமி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து காயத்ரி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினையில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story