போட்டித் தேர்வுகளுக்கு இணையதளம் மூலம் பயிற்சி வேலை வாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு


போட்டித் தேர்வுகளுக்கு இணையதளம் மூலம் பயிற்சி வேலை வாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு
x
தினத்தந்தி 2 July 2020 9:30 PM GMT (Updated: 2 July 2020 6:56 PM GMT)

போட்டித் தேர்வுகளுக்கு இணையதளம் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

நெல்லை, 

போட்டித் தேர்வுகளுக்கு இணையதளம் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் கூறிஇருப்பதாவது:-

இணையதளம் மூலம் பயிற்சி

வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் ஆலோசனைப்படி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தற்போது இணையதளம் மூலம் நெல்லை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் நடத்தப்பட்டு வருகிறது.

சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன் இணையதளம் மூலம் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு தினமும் காலை 10 மணி முதல் 12 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் வகுப்புகள் கிடையாது. மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது.

வாட்ஸ்-அப் எண்

ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் மாணவர்கள் இணையதள பயிற்சி வகுப்பில் எளிதாக கலந்து கொள்ள முடியும். இதில் சேர விரும்பும் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் 9942503151 என்ற செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு தங்களது பெயர், பாலினம், முகவரி ஆகியவற்றை அனுப்பினால் 24 மணி நேரத்துக்குள் இணையதள பயிற்சி வகுப்பு தொடர்பான வாட்ஸ்-அப் குழுவில் இணைவதற்கு லிங் அனுப்பப்படும். அதன் பிறகு வகுப்பு குறித்த தகவல்கள் கிடைக்கும்.

மேலும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை போட்டித்தேர்வு எழுதும் மாணவர்கள் பயன்படும் வகையில் மெய்நிகர் கற்றலுக்கான வலைத்தளத்தை (விர்சுவல் லேர்னிங் போர்டல்) www.tamilnaducareerservices.tn.gov.in உருவாக்கி உள்ளது. இதில் பெரும்பாலான போட்டி தேர்வுகளுக்கு உரிய பாடத்திட்டம் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. மாணவர்கள் இதன் முகவரியில் பதிவு செய்தால் இதில் உள்ள பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இந்த வலைத்தளத்தில் உள்ள மாதிரி வினாக்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story