கணவருடன் ஏற்பட்ட தகராறில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை காட்டுமன்னார்கோவில் அருகே பரிதாபம்


கணவருடன் ஏற்பட்ட தகராறில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை காட்டுமன்னார்கோவில் அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 3 July 2020 11:30 PM GMT (Updated: 3 July 2020 9:30 PM GMT)

காட்டுமன்னார்கோவில் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.

காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

குடும்ப தகராறு

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ம.கொளக்குடி எல்.இ.பி. தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 27). இவர் காட்டுமன்னார்கோவிலில் செயல்பட்டு வரும் சுயஉதவி குழுவில் தவணை தொகை வசூல் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இவரும் காட்டுமன்னார்கோவில் அருகே ஆட்கொண்டநத்தம் கிராமத்தை சேர்ந்த பிரியங்கா(22) என்பவரும் காதலித்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு வயதில் மீனலோட்சினி என்ற பெண் குழந்தை இருந்தது.

கணவன்-மனைவி இடையே கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. பாலமுருகனின் குழந்தைக்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் பிறந்த நாள் விழா நடைபெற இருந்தது. இதனை சிறப்பாக கொண்டாட பிரியங்கா முடிவு செய்திருந்தார்.

குழந்தை கொலை

இந்நிலையில் பாலமுருகனுக்கும், பிரியங்காவுக்கும் இடையே நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரியங்கா, தனது குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி பாலமுருகன் வீட்டில் இருந்து வெளியே சென்றதும், அவர் தனது குழந்தை மீனலோட்சினியின் கழுத்தில் சேலையை கட்டி தூக்கில் தொங்கவிட்டு கொன்றதாக கூறப்படுகிறது.

பின்னர் அவரும் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதற்கிடையே அவரது வீட்டுக்கு வந்த அக்கம் பக்கத்தினர் தூக்கில் பிரியங்காவும், மீனலோட்சினியும் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விசாரணை

அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால், காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிரியங்கா, மீனலோட்சினி ஆகியோரது உடல்களை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story