மதுரையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 8 பேர் பலி மேலும் 287 பேருக்கு நோய் தொற்று


மதுரையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 8 பேர் பலி மேலும் 287 பேருக்கு நோய் தொற்று
x
தினத்தந்தி 4 July 2020 1:40 AM GMT (Updated: 4 July 2020 1:40 AM GMT)

மதுரையில் கொரோனாவுக்கு மூதாட்டி உள்பட 8 பேர் பலியானார்கள். மேலும் புதிதாக 287 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை, 

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கொரோனா

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் மட்டுமின்றி மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மதுரையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 8 பேர் திடீரென உயிரிழந்தனர்.

மதுரை பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர், 52 வயது நபர், 55 வயது பெண், 71 வயது முதியவர், 87 வயது மூதாட்டி ஆகியோர் தனியார் மருத்துவ மனையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தனர். இந்த நிலையில் அவர்கள் திடீரென உயிரிழந்தனர். இது போல், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 70 வயது முதியவர், 81 வயது முதியவர், 43 வயது ஆண், 80 வயது முதியவர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். இவர்களுக்கு வேறு சில நோய்கள் இருந்ததாகவும் இதனால் இவர்கள் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மதுரையில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.

287 பேருக்கு தொற்று

மதுரையில் நேற்று ஒரே நாளில் 287 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 39 பேர் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் மதுரை நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் போலீஸ், டாக்டர்கள், மருத்துவமனை பணியாளர்கள், நர்சுகள், அரசு ஊழியர்கள் என 43 பேர் பாதிக்கப்பட்டனர். சென்னையில் இருந்து வந்த 3 பேருக்கும், 7 கர்ப்பிணிகளுக்கும், ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 76 பேருக்கும் என மொத்தம் ஒரே நாளில் 287 பேர் நேற்று பாதிக்கப்பட்டனர்.

இதுபோல் 147 பேருக்கு சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தது. இதனை தொடர்ந்து அவர்களை அரசு மருத்துவமனையில் பரிசோதித்து பார்த்தபோது அவர்களுக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

குணமடைந்தவர்கள்

நேற்று கொரோனா உறுதிசெய்யப்பட்ட இவர்கள் 287 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்றுடன் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,423 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 967 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 2,405 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story