நிர்ணயித்த விலையில் பருத்தி கொள்முதல் செய்யக்கோரி திருவாரூரில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


நிர்ணயித்த விலையில் பருத்தி கொள்முதல் செய்யக்கோரி   திருவாரூரில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 July 2020 6:30 AM GMT (Updated: 4 July 2020 6:30 AM GMT)

நிர்ணயித்த விலையில் பருத்தி கொள்முதல் செய்யக்கோரி திருவாரூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர், 

திருவாரூர் மாவட்டத்தில் பருத்தி அறுவடை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வேளாண் ஒழங்குமுறை விற்பனை கூடங்களில் இந்திய பருத்தி கழகம் பெயரளவில் மட்டுமே பருத்தியை கொள்முதல் செய்வதாலும், தனியார் வியாபாரிகள் விலையை குறைப்பதாலும் உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்து வருகிறார்கள்.

எனவே பருத்திக்கு நிர்ணயித்த விலையில் இந்திய பருத்தி கழகம் முழுமையாக கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

முழுமையாக...

அதன்படி நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் பருத்தியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ரெங்கராஜன், மாவட்ட செயலாளர் மாசிலாமணி ஆகியோர் தலைமை தாங்கினர்.

நாகை செல்வராசு எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், விவசாயிகள் நலச்சங்க தலைவர் சேதுராமன், செயலாளர் ராமமூர்த்தி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் இந்திய பருத்தி கழகம் முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும். இல்லையென்றால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Next Story