காசியை போல் மற்றொரு சம்பவம்: பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.10 லட்சம் பறித்த வாலிபர் கன்னியாகுமரியில் பரபரப்பு


காசியை போல் மற்றொரு சம்பவம்: பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.10 லட்சம் பறித்த வாலிபர் கன்னியாகுமரியில் பரபரப்பு
x
தினத்தந்தி 6 July 2020 10:30 PM GMT (Updated: 6 July 2020 9:37 PM GMT)

இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.10 லட்சம் பறித்த வாலிபர் தலைமறைவாகி விட்டார்.

கன்னியாகுமரி,

இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.10 லட்சம் பறித்த வாலிபர் தலைமறைவாகி விட்டார்.

கன்னியாகுமரியில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

காசியை போல் மற்றொரு சம்பவம்

நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்தவர் காசி. இவர் சமூக வலைதளம் மூலம் பெண் டாக்டர் உள்பட பல பெண்களிடம் நெருங்கி பழகி மிரட்டி பணம் பறித்ததாக வழக்குகள் பதிவாகி உள்ளன. தற்போது அவர் சிறையில் உள்ளார். அவருடன் தொடர்புடைய 2 நண்பர்களும் சிக்கினர்.

தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய காசி சம்பவத்தை போன்று, பெண்ணிடம் நெருங்கி பழகியதோடு அவரிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பறித்ததாக ஒரு வாலிபர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது, கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த 2 குழந்தைகளின் தந்தை கன்னியாகுமரி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஆபாச படம் எடுத்தல்

எனது மனைவிக்கும், மகேஷ் இளங்கோ என்ற வாலிபருக்கும் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே நெருக்கமானது. அப்போது இருவரும் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை வீடியோவாக எடுத்துள்ளார். பின்னர், எனது மனைவியிடம் ஆசை வார்த்தை கூறி மகேஷ் இளங்கோ கடன் வாங்கினார்.

அந்த வகையில் கொஞ்சம், கொஞ்சமாக ரூ.10 லட்சம் வரை மகேஷ் இளங்கோ பெற்றிருந்தார். அந்த பணத்தை பற்றி என்னுடைய மனைவி கேட்ட போது, மகேஷ் இளங்கோ தன்னுடைய சுயரூபத்தை காட்ட தொடங்கினார். அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோவை மனைவியிடம் காட்டி, பணம் பற்றி கேட்டால் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். என் மனைவியை ஆபாச படம் எடுத்து மிரட்டியதோடு, ரூ.10 லட்சம் பறித்த மகேஷ் இளங்கோ மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

பரபரப்பு

இதனை தொடர்ந்து வாலிபர் மகேஷ் இளங்கோ மீது 354 (ஏ), 384, 506(1), பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் வழக்குப்பதிவு செய்தார். இதனை அறிந்ததும் மகேஷ் இளங்கோ தலைமறைவாகி விட்டார்.

நெருக்கமாக இருக்கும் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என இளம்பெண்ணை வாலிபர் மிரட்டியதோடு, அவரிடம் இருந்து ரூ.10 லட்சத்தை பறித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story