பெரம்பலூர் மாவட்ட உற்பத்தியாளர்களிடம் இருந்து முழுமையாக பால் கொள்முதல் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


பெரம்பலூர் மாவட்ட உற்பத்தியாளர்களிடம் இருந்து முழுமையாக பால் கொள்முதல் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 July 2020 5:58 AM GMT (Updated: 8 July 2020 5:58 AM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து முழுமையாக பால் கொள்முதல் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர், 

அனைத்து விவசாய அமைப்பு, அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் கட்சிகளின் சார்பில் பால் உற்பத்தியாளர் சங்க மாநில செயலாளர் செல்லதுரை தலைமையில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கொரோனா வைரஸ் தொற்றுதலை காரணம் காட்டி பெரம்பலூர் நகரம், வேப்பந்தட்டை தாலுகா நெய்குப்பை உள்ளிட்ட பல பகுதிகளில் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கூட்டுறவு சங்கத்தினர் பால் முழுவதையும் கொள்முதல் செய்யாமல் பாதி பாலை திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

இதனால் பாலை பயன்படுத்தமுடியாமல் கெட்டுப்போய் கீழே கொட்டிவிடுவதால் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் பெருத்த நஷ்டம் அடைகின்றனர். ஆகவே பால் முழுவதையும் கொள்முதல் செய்யவேண்டும். கொரோனா ஊரடங்கு காலத்தில், அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் வழங்கிட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிடவேண்டும்.

கோரிக்கை மனு

அந்தந்த பால்சொசைட்டி செயலாளர் அளிக்கும் உறுதிமொழியின் அடிப்படையில் பால் உற்பத்தியாளர்களுக்கு வங்கிகள், பால்சொசைட்டிகள் பிணையில்லா கடனாக தலா ரூ.10 லட்சம் வழங்கவேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் திரளான விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

Next Story