திருப்பூரில் 12 இடங்களில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்; அதிகாரிகளின் பாராமுகம் ஏனோ?


திருப்பூரில் 12 இடங்களில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்; அதிகாரிகளின் பாராமுகம் ஏனோ?
x
தினத்தந்தி 9 July 2020 10:38 PM GMT (Updated: 9 July 2020 10:38 PM GMT)

தாகம் தீர்க்க தவிக்கும் பொதுமக்கள் ஒருபுறம் இருக்க, அதிகாரிகளின் பாராமுகத்தால் திருப்பூரில் 12 இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பல லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு 1 மற்றும் 2-வது குடிநீர் திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் தண்ணீரும், 3-வது குடிநீர் திட்டத்தின் கீழ் பவானி தண்ணீரும் பல ஆண்டுகளாக வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் 4-வது குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட உள்ளதால் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் 1-வது திட்ட குடிநீர் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து நிலவி வருகிறது. பல இடங்களில் குடிநீருக்காக பொதுமக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் திருப்பூர்-அவினாசி ரோட்டில் பல்வேறு இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் தொடர்ந்து வீணாகி வருகிறது. மேலும் 24 மணி நேரமும் வீணாகும் குடிநீர் சாக்கடை கால்வாயில் கலக்கும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. பெரியார்காலனியில் சாலையோரம் ஏற்பட்டுள்ள குழாய் உடைப்பால் குடிநீர் தொடர்ந்து சாக்கடையில் கலக்கிறது. அனுப்பர்பாளையம்புதூர் சந்திப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட உடைப்பு காரணமாக குடிநீர் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகளும் அவதிக்கு உள்ளானார்கள்.

இதேபோல் அனுப்பர்பாளையத்தில் உள்ள 1-வது மண்டல அலுவலகம் முன்பாக கடந்த பல ஆண்டுகளாக குடிநீர் வீணாகியது. இதை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லை. அனுப்பர்பாளையத்தை அடுத்த திலகர் நகரில் குழாய் உடைப்பால் காரணமாக குடிநீர் தொடர்ந்து வெளியேறி சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. அதில் தண்ணீர் நிரம்பி இருப்பதால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் அனுப்பர்பாளையத்திற்கும் தண்ணீர்பந்தல் காலனிக்கும் நடுவில் 3 இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து வெளியேறும் குடிநீர் 24 மணி நேரமும் சாக்கடை கால்வாயில் கலந்து வருகிறது. அதேபோல் அம்மாபாளையம் சோதனைச்சாவடி அருகே உள்ள வங்கி முன்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் ½ கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் குடிநீர் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.

மேலும் அந்த பகுதியில் சோதனை சாவடி அருகிலேயே அதிக அளவில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதேபோல் திருமுருகன்பூண்டியை அடுத்த கோபால்டு மில் அருகே சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட குழாய் உடைப்பு இதுவரை சரிசெய்யப்படவில்லை. இதனால் அந்த பகுதியிலும் குடிநீர் தொடர்ந்து சாக்கடை கால்வாயில் கலந்து வருகிறது. திருப்பூரில் பிரதான சாலைகளில் ஒன்றான அவினாசி ரோட்டில் பெரியார்காலனி முதல் திருமுருகன்பூண்டி வரை 12 இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வருகிறது. அந்த வழியாக தினமும் அரசு உயர் அதிகாரிகள் சென்று வந்தாலும் யாரும் இதுவரை கண்டு கொள்ளவில்லை. குழாய் உடைப்பு சரிசெய்யப்படவும் இல்லை. 24 மணி நேரமும் குடிநீர் வீணாவது தடுத்து நிறுத்தப்படவும் இல்லை. இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. அதிகாரிகளின் பாராமுகத்தால் பொதுமக்கள் மனவேதனை அடைந்துள்ளனர்.

மேலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி, பேரூராட்சி அதிகாரிகளில் யார் சரி செய்வது என்பதில் அடிக்கடி குழப்பம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே நீண்ட நாட்களாக குழாய் உடைப்பு சரி செய்யப்படாமல் உள்ளது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். குடிநீர் கிடைக்காமல் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் திண்டாடி வரும் நிலையில் தினமும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி சாக்கடை கால்வாயில் கலக்கிறது. இது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அனுப்பர்பாளையம் மற்றும் தண்ணீர்பந்தல் காலனி பகுதிகளில் 24 மணி நேர பொதுக்குழாயில் குடிநீருக்காக இரவு பகலாக கால்கடுக்க நின்று தண்ணீர் பிடித்து செல்லும் பொதுமக்களுக்கு குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருவது பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு திருப்பூர் அவினாசி ரோட்டில் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்து, குடிநீர் விணாவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story