விருதுநகர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர், டாக்டர் உள்பட 161 பேருக்கு கொரோனா பாதிப்பு


விருதுநகர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர், டாக்டர் உள்பட 161 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 11 July 2020 4:45 AM GMT (Updated: 11 July 2020 4:45 AM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் டாக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் மாவட்டத்தின் பாதிப்பு எண்ணிக்கை 1,906 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 27,049 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 1,746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 4,084 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இதுவரை 644 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 11 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 340 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. விருதுநகர் லட்சுமிநகரை சேர்ந்த 44 வயது டாக்டர், மேற்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர், விருதுநகர் பாரதிதாசன் தெரு, கட்டபொம்மன் தெரு, சீதக்காதிதெரு, அம்பேத்கர் தெரு, சத்திரரெட்டியபட்டி, காந்திநகர், பெரியார்பாளையம், சின்னபேராலி, சூலக்கரை, குருசாமி கொத்தன்தெரு, அல்லம்பட்டி, என்.ஜி.ஓ. காலனி, அழகாபுரி, ரெயில்வேபீடர் ரோடு, புல்லலக்கோட்டை ரோடு, சிவன்கோவில் தெரு, அன்னை சிவகாமிபுரம், எஸ்.பி.பி.என்.எஸ்.தெரு, தந்திமரத் தெரு, அய்யனார் நகர், பாலாஜிநகர் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை புளியம்பட்டி, சொக்கலிங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், திருச்சுழி, நரிக்குடி, குலசேகரநல்லூர், பனையூர், ஒலக்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களுக்கும், ராஜபாளையம், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், காரியாபட்டி, பரளச்சி, கத்தாளம்பட்டி, மேல் ஆவியூர், பூலாங்கால் உள்பட பல்வேறு கிராமப்பகுதிகளை சேர்ந்த 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதன் மூலம் இம்மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,906 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிப்பு ஏற்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் விருதுநகர் நகர் பகுதியை சேர்ந்தவர்களாக உள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த 3 போலீசாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மருத்துவ பரிசோதனை மையத்தில் இருந்து தான் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. சிவகங்கை, நெல்லை மையங்களில் இருந்து முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.

Next Story