திண்டுக்கல்லில் கொட்டித்தீர்த்த மழை


திண்டுக்கல்லில் கொட்டித்தீர்த்த மழை
x
தினத்தந்தி 11 July 2020 11:57 PM GMT (Updated: 11 July 2020 11:57 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களாக பருவமழை சரியாக பெய்யவில்லை. கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது.

திண்டுக்கல்,

கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்டம் முழுவதும் பரவலாக விடிய,விடிய மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று காலை திண்டுக்கல்லில் வழக்கம் போல் வெயில் கொளுத்தி எடுத்தது. மேலும் அனல் காற்று வீசியது. இதற்கிடையே மதியத்துக்கு பின்னர் வானில் கருமேகங்கள் திரண்டன.

இதையடுத்து மாலை 3 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. மேலும் சிறிது நேரத்தில் அது கனமழையாக மாறியது. சுமார் 1 மணி நேரம் நல்ல மழை கொட்டித்தீர்த்தது. அதன்பின்னர் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக நாகல்நகர், ஆர்.எஸ்.சாலை, மெயின்ரோடு, ரவுண்டுரோடு உள்பட பல்வேறு இடங்களில் மழைவெள்ளம் முழங்கால் அளவுக்கு தேங்கியது. சில இடங்களில் மழைநீர் ஆறாக ஓடியது.

இதற்கிடையே மழைநீர் சேமிப்பு குளமாக பராமரிக்கப்படும் திண்டுக்கல் கோபாலசமுத்திர குளம், சிலுவத்தூர் சாலை குளம் ஆகியவை வறட்சியால் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடந்தன. நேற்று 1 மணி நேரம் பெய்த மழையால், அந்த குளங்களுக்கு தண்ணீர் வரத்தொடங்கியது. மேலும் இரவு முழுவதும் இதமான குளிர் நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Related Tags :
Next Story