சிங்கம்புணரி ரேஷன் கடையில் தரமற்ற பொருட்களை விற்பனை செய்வதாக பெண்கள் முற்றுகை


சிங்கம்புணரி ரேஷன் கடையில் தரமற்ற பொருட்களை விற்பனை செய்வதாக பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 12 July 2020 4:45 AM GMT (Updated: 12 July 2020 4:45 AM GMT)

சிங்கம்புணரியில் உள்ள ரேஷன் கடையில் தரமற்ற பொருட்களை விற்பனை செய்வதாக அப்பகுதி பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி தபால் நிலையம் அருகில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் பொதுமக்களுக்கு விலையில்லா பொருட்களை ரேஷன் கடைகளில் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த கடையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் பொருட்கள் வாங்க வந்தனர். அரிசியை தவிர கூடுதலாக வழங்கும் டீத் தூள், சோப்பு, சேமியா பாக்கெட் உள்ளிட்ட பொருட்கள் மிகவும் தரமற்ற நிலையில் உள்ளது.

இதை அந்த ரேஷன்கடையில் உள்ள ஊழியர்கள் அரிசி வாங்க வரும் பொதுமக்களை கட்டாயப்படுத்தி வாங்க வைக்க முயற்சி செய்வதாக கூறி அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சிங்கம்புணரி வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க பொதுமேலாளர் குமரகுருபரன் கூறியதாவது:- சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பண்டக சாலையில் இருந்து வரும் டீத்தூள், சேமியா மற்றும் உப்பு போன்ற பொருட்கள் குறைந்த விலையில் தரமான பொருட்களாக அரசால் பரிந்துரை செய்யப்பட்டு பின்னர் தான் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் வாடிக்கையாளருக்கு அரசு அறிவுறுத்தலின் படி அவர்களுக்கு தரமான பொருட்கள் தற்போது ஊரடங்கு காலத்தில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் யாரையும் கட்டாயப்படுத்தி பொருட்களை வாங்க வைப்பது இல்லை. தற்போது பொதுமக்கள் கூறும் புகார் குறித்து விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story