கரூரில், காதல் மனைவியுடன் கருத்துவேறுபாடு: தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


கரூரில், காதல் மனைவியுடன் கருத்துவேறுபாடு: தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 13 July 2020 7:56 AM GMT (Updated: 13 July 2020 7:56 AM GMT)

கரூரில், காதல் மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் கூலித் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்,

கரூர் வெங்கமேடு பகுதிக்குட்பட்ட அண்ணாகாலனி பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 28). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு சுகந்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒரே வீட்டில் பேசாமல் வாழ்ந்து வந்தனர். இதனால் மோகன், தனது மனைவியிடம் விவகாரத்து கேட்டுள்ளார். இதற்கு சுகந்தி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட மோகன் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் வெங்கமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மோகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புசெல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story