விவசாயியை கொன்று போலீசுக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயற்சி; மனைவி-மகன் உள்பட 3 பேர் கைது


விவசாயியை கொன்று போலீசுக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயற்சி; மனைவி-மகன் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 15 July 2020 12:19 AM GMT (Updated: 15 July 2020 12:19 AM GMT)

திருக்காட்டுப்பள்ளி அருகே விவசாயியை அடித்துக்கொன்று போலீசுக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயன்ற மனைவி, மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள சுக்காம்பார் பழைய தெருவை சேர்ந்தவர் ஈசாக்(வயது 55). விவசாயி. இவருடைய மனைவி விஜயா(52). இவர்களுடைய மகன் ஆண்டனி ஆனந்தரூபன்(30). ஈசாக் நேற்று காலை தனது வீட்டில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி ஆனந்தன் தோகூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரில் ஈசாக்கை, அவருடைய மகன் ஆண்டனி ஆனந்தரூபன் மற்றும் மனைவி விஜயா ஆகிய 2 பேரும் சேர்ந்து அடித்துக்கொன்று விட்டதாகவும், இந்த தகவலை மறைத்து அடக்கம் செய்ய முயற்சி செய்து வருவதாகவும் கிராம நிர்வாக அதிகாரி கூறி இருந்தார்.

அதன்பேரில் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சித்திரவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, தோகூர் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஈசாக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், குடும்ப தகராறு காரணமாக ஈசாக்கை அவருடைய மகன் ஆண்டனி ஆனந்தரூபன், மனைவி விஜயா ஆகிய 2 பேரும் இரும்பு கம்பியால் அடித்ததும், இதில் அவர் இறந்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக தோகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆண்டனி ஆனந்தரூபன், விஜயா ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

மேலும் கொலையை மறைக்க போலீசுக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயற்சி செய்ததாக உறவினர் பிரான்சிஸ் சேவியர்(52) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

விவசாயியை அடித்துக்கொன்று அவருடைய உடலை போலீசுக்கு தெரியாமல் அடக்கம் செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story