விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 121 பேருக்கு கொரோனா


விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 121 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 15 July 2020 4:17 AM GMT (Updated: 15 July 2020 4:17 AM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1,602 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று 400-க்கும் மேற்பட்டோரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்தது.

இதில் 78 ஆண்கள், 43 பெண்கள் என மேலும் 121 பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், வானூர், மரக்காணம், கோட்டக்குப்பம், அய்யூர்அகரம், கல்யாணம்பூண்டி, கக்கனூர், மேலமங்கலம், விக்கிரவாண்டி, தென்கோடிப்பாக்கம், உப்புவேலூர், நல்லாவூர், ஓமிப்பேர், சித்தானங்கூர், டி.கொணலவாடி, மாதம்பட்டு, மாரங்கியூர், பேரங்கியூர், பெலாக்குப்பம், காவேரிப்பாக்கம், பூதேரி, நெகனூர், திருவம்பட்டு, தென்பசார், பனையூர், தைலாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்களில் காஞ்சீபுரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் விழுப்புரம் மாவட்டம் வசந்தாபுரத்தை சேர்ந்த 45 வயதுடையவரும், விழுப்புரம் கிளை சிறையில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் விழுப்புரம் வேலந்தாங்கலை சேர்ந்த 40 வயதுடையவரும், டி.தேவனூர் கிராம நிர்வாக அலுவலரான 38 வயதுடையவரும், ஓங்கூர் கிராம உதவியாளரான 51 வயதுடைய பெண்ணும், வெள்ளிமேடுபேட்டை கிராம உதவியாளரான 43 வயதுடையவரும், செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ.வின் உறவினர்கள் 5 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட 121 பேரும் விழுப்புரத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் விழுப்புரம் மனிதவள சுகாதார மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,602-ல் இருந்து 1,723 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 41 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனால் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,034 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிமாநிலங்கள் மற்றும் சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து வந்த 248 பேர் தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டும், கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக 299 பேர் அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டும்கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Next Story