கள்ளக்குறிச்சி நகரில் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைப்பு


கள்ளக்குறிச்சி நகரில் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைப்பு
x
தினத்தந்தி 15 July 2020 5:05 AM GMT (Updated: 15 July 2020 5:05 AM GMT)

கள்ளக்குறிச்சி நகரில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து அனைத்து வியாபாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் நடந்தது.

கள்ளக்குறிச்சி,

காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்துக்கு கூடுதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமை தாங்கி, கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஏதுவாக கள்ளக்குறிச்சி நகரை சேர்ந்த அனைத்து வியாபாரிகளும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் செல்வக்குமார், செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வரவேற்றார்.

கூட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட அரசின் விதிகளை பின்பற்றி மளிகைக் கடை, ஜவுளிக்கடை, நகைக்கடை, காய்கறி கடைஉள்பட அனைத்து கடைகளையும் தினந்தோறும் (ஞாயிற்றுக்கிழமை தவிர) காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறப்பது எனவும், ஓட்டல்கள் மாலை 6 மணி வரையும், மருந்துக்கடைகள், பால் கடைகள் இரவு8 மணி வரை மட்டுமே திறப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், மருந்துக்கடை உரிமையாளர்கள் சங்க நிர்வாகி விஜயகுமார் உள்பட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story