குமரியில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது ஒரே நாளில் புதிதாக 166 பேருக்கு தொற்று


குமரியில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது ஒரே நாளில் புதிதாக 166 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 16 July 2020 4:56 AM GMT (Updated: 16 July 2020 4:56 AM GMT)

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 166 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கிறது. கிராமங்கள், நகரங்கள் என அனைத்து பகுதிகளிலும் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருப்பதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

பாதிப்பு எண்ணிக்கை ஒருபுறம் உயர, இறப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்வதால் மக்கள் அட்சத்தில் இருந்து வருகிறார்கள். அதிலும் கடந்த 7 நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 8-ந் தேதி வரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 900-ஐ தாண்டியிருந்தது. ஆனால் நேற்று வரையில் இந்த பாதிப்பு எண்ணிக்கை இரண்டு மடங்குக்கு மேலாக உயர்ந்துள்ளது. அதாவது நேற்று முன்தினம் நள்ளிரவு வரையில் 1856 ஆக இருந்தது.

2022 ஆக உயர்வு

குமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி மற்றும் தனியார் கொரோனா பரிசோதனை மையங்கள் மூலமாக புதிதாக 166 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிப்பு 2022 ஆக உயர்ந்தது.

நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதால் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்காகவும், தனிமைப்படுத்துதலுக்காகவும் அமைக்கப்பட்டு இருந்த 750 படுக்கைகளில் 90 சதவீதம் படுக்கைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி விட்டன. இன்னும் 10 சதவீத படுக்கைகள் தீவிர சிகிச்சை தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்காக வைக்கப்பட்டுள்ளன.

என்ஜினீயரிங் கல்லூரியில் அனுமதி

இதனால் புதிதாக கொரோனா நோயாளிகளை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்க இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் 350 படுக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அங்கு நேற்று முன்தினம் இரவில் இருந்து புதிய கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். முதல் நாளிலேயே 70 நோயாளிகள் வரை அங்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்று 100-க்கு மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

என்ஜினீயரிங் கல்லூரியில் உள்ள படுக்கைகள் நிரம்பியதும் அருகில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கொரோனா நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்க வசதியாக படுக்கைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதேபோல் பல்வேறு பள்ளி, கல்லூரிகளிலும் படுக்கைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

Next Story