கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வினியோகம்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வினியோகம்
x
தினத்தந்தி 16 July 2020 5:38 AM GMT (Updated: 16 July 2020 5:38 AM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கி தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி,

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கினால் 2020-21-ம் கல்வியாண்டில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய வழிகாட்டு முறைகளை பின்பற்றி பாடப்புத்தகங்களை வழங்கி வீடியோ பாடங்கள் பதிவிறக்கம் செய்து தரப்பட உள்ளது. இதில் முதல் கட்டமாக 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களுடன் ‘ஹைடெக் லேப்’ மூலம் வீடியோ பாடங்கள் பதிவிறக்கம் செய்து தரப்பட உள்ளதால் மாணவர்கள், பாடப்புத்தகங்களை பெற பள்ளிக்கு வரும்போது தங்களுடைய மடிக்கணினியையும் கொண்டு வர வேண்டும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் வழங்கினார்

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 238 அரசு பள்ளிகள், 31 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 13 சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 282 பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் 7,967 மாணவர்கள், 9,007 மாணவிகள் என 16,974 பேருக்கும் மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் 9,822 மாணவர்கள், 9,837 மாணவிகள் என 19,659 பேருக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

இதனை நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு குறிப்பிட்ட சில பள்ளி மாணவ-மாணவிகளை வரவழைத்து அவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை அமைச்சர் சி.வி. சண்முகம் வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சருடன் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, முத்தமிழ்செல்வன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

வீடியோ பாடங்கள்

பதிவிறக்கம்

இதனை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி வரவழைத்து அவர்களை சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக தனித்தனி அறைகளில் அமர வைத்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், பாடப்புத்தகங்களை வழங்கினர். இதில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி தொலைக் காட்சி மூலம் பாடம் கற்பிக்கப்படுவதால் அவர்களுக்கு பள்ளிகளில் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டதோடு அவர்களது மடிக்கணினியில் ‘ஹைடெக் லேப்’ மூலம் வீடியோ பாடங்கள் பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் 9 ஆயிரத்து 267 மாணவர்கள், 9 ஆயிரத்து 18 மாணவிகள் என 18 ஆயிரத்து 285 பேருக்கும், 10-ம் வகுப்பு படிக்கும் 11 ஆயிரத்து 118 மாணவர்கள், 10 ஆயிரத்து 501 மாணவிகள் என 21 ஆயிரத்து 619 பேருக்கும் விலையில்லா பாடநூல் மற்றும் மடிக்கணினியில் ‘ஹைடெக் லேப்’ மூலம் வீடியோ பாடங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட பாடங்கள் வழங்கும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா தலைமை தாங்கி, மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா, நேர்முக உதவியாளர்கள் கோபி, கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன், பள்ளி துணை ஆய்வாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story