தூத்துக்குடி அருகே, பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் - எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு


தூத்துக்குடி அருகே, பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் - எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு
x
தினத்தந்தி 16 July 2020 10:00 PM GMT (Updated: 17 July 2020 1:11 AM GMT)

தூத்துக்குடி அருகே எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

ஸ்பிக்நகர்,

இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி அருகே உள்ள பொட்டல்காடு, குலையன்கரிசல் பகுதிகளில் எரிவாயு குழாய் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக போலீஸ் பாதுகாப்புடன் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை அறிந்த பொட்டல்காடு கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு தங்களின் வீடுகளில் கருப்பு கொடி கட்டினர். மேலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பொட்டல்காடு ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்கள் வீடுகளில், கொரோனா தொற்று காரணமாக பொது இடங்களில் 3 பேருக்கு மேல் கூட கூடாது என்று போலீசார் நோட்டீசு ஒட்டி சென்றனர். ஆனால் இதனை பொருட்படுத்தாமல் நேற்று காலையில் அந்த பகுதி பொதுமக்கள் ஊரில் உள்ள சந்தனமாரியம்மன் கோவில் வளாகத்தில் திரண்டனர். தொடர்ந்து அவர்கள் எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்வம், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் குடியிருப்பு மற்றும் விவசாய பகுதிகளில் எரிவாயு குழாய்கள் பதிக்க கூடாது. இது எங்கள் வாழ்வாதார பிரச்சினை, எனவே மாற்று பாதையில் எரிவாயு குழாய்களை பதிக்க வேண்டும் என்று கூறினார்கள். இதற்கிடையே தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜித்சிங் கலோன் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பொதுமக்கள் தொட ர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பொட்டல் காடு ஊர் தலைவர் செல்வசேகர், புதுக்கோட்டை தி.மு.க. விவசாய அணி ஒன்றிய செய லாளர் ஆஸ்கார், நாம் தமிழர் கட்சி பெண்கள் பாசறை செய லாளர் அன்னலட்சுமி, மள்ளர் பேராயம் தலைவர் சுபாஷினி மள்ளத்தி, சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகி பொன்ராஜ் உள்பட 250-்க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டம் காரணமாக பொட்டல்காடு ஊருக்கு செல்லும் முக்கிய பாதைகளான திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையில் உள்ள பொட்டல்காடு விலக்கு, குலையன்கரிசல், கூட்டாம்புளியில் இருந்து செல்லும் வழிகள் அனைத்தும் இரும்பு தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டன. இதற்கிடையே பொதுமக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் ஏற்றி கொண்டு புதுக்கோட்டையில் இருந்து குலையன்கரிசல், கூட்டாம்புளி வழியாக சென்ற லோடு ஆட்டோவை பொட்டல்காடு ஊர் எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் லோடு ஆட்டோ விடுவிக்கப்பட்டது. அதன்பின்னர் சமையல் செய்து பொதுமக்கள் சாப்பிட்டனர். தொடர்ந்து அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மாலை 6 மணிக்கு காத்திருப்பு போராட்டம் நடந்த இடத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வந்தார். அவர் பொதுமக்களிடம் கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் கூட்டம் கூடக்கூடாது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து பேசுங்கள். அப்போது இதற் கான உரிய தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்து விட்டு புறப்பட்டு சென்றார். இதைத் தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் சிலர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

அங்கு நடந்த பேச்சுவார்த்தையில்,‘ தற்காலிகமாக பணி நிறுத்தி வைக்கப்படும். மாற்றுப்பாதையில் அமைக்க வாய்ப்பு இருப்பது குறித்து ஆலோசிக்கப்படும்’ என கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்தார். இதை ஏற்று நேற்று இரவு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story