கோவையில் முழு ஊரடங்கு அறிவிக்கும் சூழல் இல்லை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி


கோவையில் முழு ஊரடங்கு அறிவிக்கும் சூழல் இல்லை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி
x
தினத்தந்தி 17 July 2020 4:10 AM GMT (Updated: 17 July 2020 4:10 AM GMT)

கோவையில் முழு ஊரடங்கு அறிவிக்கும் சூழல் இல்லை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை,

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கோவை மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி பேசினார்.

இதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத், மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண், மேற்கு மண்டல டி.ஐ.ஜி. நரேந்திரன் நாயர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி, மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின், கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் காளிதாஸ், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி டீன் நிர்மலா, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் கிருஷ்ணா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ரமேஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆய்வுக்கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சித்த மருத்துவ சிகிச்சை

கோவை மாவட்டம் சென்னைக்கு அடுத்தபடியாக தொழில் வளர்ச்சியிலும், மக்கள்தொகை அடிப்படையிலும் பெரிய மாவட்டமாக உள்ளது. கோவை மாவட்டத்தில் பல்வேறு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவும் வேகம் கட்டுப்படுத்தப் பட்டு உள்ளது. இறப்பு சதவீதமும் மிகவும் குறைவாகவே உள்ளது. கொரோனா தடுப்பு பணியில் அனைத்து துறை அலுவலர்களும் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகிறார்கள்.

அதன்படி மாநகராட்சி பகுதிகளில் தினமும் 100 முகாம்களும், ஊரக பகுதிகளில் 158 சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. முதல்- அமைச்சரின் அறிவுரைப்படி கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, கபசுர குடிநீர், சூரணம், மூலிகை குடிநீர், இயற்கையான சத்து பானங்கள், சித்தா மாத்திரைகள் மற்றும் அனைத்து வகையான சத்துகளும் அடங்கிய சரிவிகித உணவுகள் வழங்கப்படுகின்றன. யோகா போன்ற மன அழுத்தத்தை நீக்கும் பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

சிறப்பான செயல்பாடு

கொரோனா சிகிச்சை அளிப்பதில் தமிழகத்தின் 2-வது பெரிய ஆஸ்பத்திரியாக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி திகழ்கிறது. இங்கு கோவை மட்டுமல்லாது திருப்பூர், நீலகிரி மற்றும் அண்டை மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து குணப்படுத்துவதில் சிறப்பாக செயலாற்றி வருகிறது. தற்போது அங்கே 149 டாக்டர்கள், 146 நர்சுகள், 268 பணியாளர்கள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் இதுவரை 80,623 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதில் கடந்த 15-ந் தேதி வரை 1,591 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில் 930 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 11 பேர் சிகிச்சை பலனின்றி இறந்து உள்ளனர். தற்போது 650 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறுபவர்களுக்கு மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் யோகா, கேரம்போர்டு போன்ற உள் விளையாட்டுகள் மற்றும் தொலைக்காட்சி வசதி போன்ற சிறப்பு ஏற்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மூன்று வேளையும் சுகாதாரமான உணவுடன் பால், அரிசி, கஞ்சி, கபசுர குடிநீர், வைட்டமின் சி பானம், சாத்துக்குடி பழச்சாறு, மிளகு ரசம், போன்விட்டா, காய்கறி சூப் மற்றும் இணை உணவுகள் சரிவிகித இடைவெளிகளில் வழங்கப்பட்டு வருகின்றன.

கண்காணிக்கும் குழுக்கள்

வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 6,382 பேர் தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப் பட்டு வருகின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் குடியிருப்போர் பொது வெளியில் செல்லாதவாறு மாநகராட்சி, வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். மாநகர பகுதியில் 24 இடங்களும், புறநகர் பகுதியில் 5 இடங்களும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.

சுகாதார துறையின் மூலம் வீட்டில் தனிமைப்படுத்துதலை கண்காணிக்கும் பணிக்குழு, அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்துதல் கண்காணிக்கும் குழு, நோய் தொற்று உள்ளவர்களின் தொடர்பு உடையவர்களை கண்காணிக்கும் குழு, சமூகத்தில் மக்களிடையே தனிமையை உறுதி செய்ய குழு, கிராம அளவிலான குழுக்கள் என பல்வேறு நிலைகளில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. கோவை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் நோய்த்தடுப்பு கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களின் நோய் அறிகுறிகளை கேட்டு அதற்கேற்ப மருத்துவர்களால் ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும் நோய் தொடர்பாக ஏற்படும் அனைத்து விவரங்களையும் தெளிவுபடுத்தி வருகிறார்கள்.

செல்போன் செயலி அறிமுகம்

மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் கோவை கேர் என்ற செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா குறித்து அறிந்து கொள்வதுடன் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க இயலும். அதில் பொதுமக்கள் தங்களின் அருகில் உள்ள மருத்துவமனைகள், மருந்து கடைகள் மற்றும் மாநகராட்சி உதவி மையங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம். கோவை மாவட்டத்துக்குள் வாகனங்கள் மூலம் நுழைவதை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் சாலையோரம் 13 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு 50 டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள், 60 வருவாய்த்துறை அலுவலர்கள், 320 போலீசார், 75 உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள், 24 வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

வாளையார் சோதனை சாவடியில் வருபவர்களுக்கு கொரோனா உள்ளதா என்பதை கண்டறிய மாதிரி சேகரிக்கப்படுகிறது. அதன்படி நாள் ஒன்றுக்கு 200 முதல் 250 மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. கோவை மாநகராட்சியில் 150 வாகனங்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் 130 வாகனங்கள் என மொத்தம் 280 வாகனங்களில் சென்று ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரு கிறது. மேலும் அதிநவீன எந்திரங்கள், விசைத் தெளிப்பான்கள், கைத்தெளிப்பான்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

முழு ஊரடங்கு இல்லை

ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளன. முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை உறுதி செய்யவும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வராமல் இருப்பதை கண்காணிக்கவும் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் இந்த அரசு பொது மக்களை காக்க கண்ணுக்கு தெரியாத கொரோனா என்ற நுண்கிருமியை எதிர்த்து போர் புரிந்து வருகிறது. இதில் மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து துணை நிற்க வேண்டும். அரசு கூறும் விதிமுறைகளை பின்பற்றுவது உடன் பொதுவெளியில் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிவது அவசியம்.

கோவையில் கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தொற்று ஏற்பட்டவர்க ளிடம் அன்பாக பழக வேண்டும். அவர்களை பாதுகாத்தாலே நோய் குணமாகிவிடும். முக கவசம் அணியாமல் அவர்களிடம் பேச வேண்டாம். அவர்களிடம் இருந்து விலகி நில்லுங்கள். கோவையில் முழு ஊரடங்கு கொண்டு வருவதற்கான சூழல் இல்லை. ஏற்கனவே தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே கொரோனாவை ஒழிக்க மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாநகராட்சி பிரதான அலுவலகத்தின் உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Next Story