பிளஸ்-2 தேர்வு: சிறை கைதிகள் 5 பேரும் தேர்ச்சி - மதுரை மாவட்டம் 94.42 சதவீத தேர்ச்சி


பிளஸ்-2 தேர்வு: சிறை கைதிகள் 5 பேரும் தேர்ச்சி - மதுரை மாவட்டம் 94.42 சதவீத தேர்ச்சி
x
தினத்தந்தி 17 July 2020 7:43 AM GMT (Updated: 17 July 2020 7:43 AM GMT)

பிளஸ்-2 தேர்வில் மதுரை மாவட்டம் 94.42 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. சிறை கைதிகள் 5 பேரும் பிளஸ்-2 வில் தேர்ச்சி பெற்றனர்.

மதுரை,

மதுரை மாவட்டத்தில் மதுரை, மேலூர், திருமங்கலம் மற்றும் உசிலம்பட்டி கல்வி மாவட்டங்கள் உள்ளன. பிளஸ்-2 பொதுத்தேர்வை 16,489 மாணவர்களும், 18,615 மாணவிகளும் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி, 15,006 மாணவர்களும், 17,956 மாணவிகளும் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றனர். மதுரை மாவட்டம் 94.42 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 13-வது இடத்தை பிடித்துள்ளது.

வேதியியல் பாடத்தில் ஒரேயொரு மாணவர் மட்டும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார். வணிகவியல் பாடத்தில் 28 மாணவ,மாணவிகளும், கணக்கு பதிவியல் பாடத்தில் 15 பேரும், பொருளியல் பாடத்தில் 12 பேரும், வணிக கணித பாடத்தில் ஒரேயொரு மாணவரும், ஆட்டோமொபைல் பாடத்தில் 4 மாணவர்களும் என 61 மாணவ,மாணவிகள் குறிப்பிட்ட பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ்-2 தேர்வை மதுரை மத்திய சிறையில் இருந்த 5 கைதிகள் எழுதி இருந்தனர். அவர்கள் 5 பேரும் தேர்வில் வெற்றி பெற்று விட்டனர். தேர்சசி பெற்ற அவர்களை சிறை அதிகாரிகள் பாராட்டினர். 

Next Story